உருமாறிய கொரோனா வைரசால் அச்சப்பட வேண்டாம்... ஆனால் கவனமா இருக்கணும்... எய்ம்ஸ் இயக்குனர் ஆறுதல்!
டெல்லி: இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனா வைரஸ் டிசம்பர் மாதத்திற்கு முன்னரே இந்தியாவில் நுழைந்திருக்கலாம் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.
புதிய உருமாறிய வைரஸ் இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதில் சாத்தியமில்லை. ஆனாலும் நாம் கூடுதல் கவனமாக இருந்து அந்த வைரஸை நாட்டில் பெரிய அளவில் வர விடமாட்டோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
தடுப்பூசிகள் ஒரு நபருக்கு பல வழிமுறைகளால் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன, எனவே வெளிவரும் தடுப்பூசிகள் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.
உருமாறிய வைரஸ்
இது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பல்வேறு இடங்களில் சில மாற்றங்களுக்கும், உருமாறிய நிலைக்கும் உட்பட்டுள்ளது. தற்போது இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனா வைரசுக்கு நாம் கவலைப்படுவதற்கு காரணம் என்னவென்றால் முதல் நிலை கொரோனா வைரஸை விட இது விரைவாக பரவுகிறது என தெரிகிறது.
நவம்பரில் வந்திருக்கலாம்
செப்டம்பர் மாதத்தில் முதன்முதலில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடித்ததாக கூறப்பட்டது. இந்தியாவில் டிசம்பரில் அதிகாரப்பூர்வமாக உருமாறிய கொரோனா உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக நவம்பரில் கூட இந்த வைரஸ் இந்தியாவுக்குள் புகுந்து இருக்கலாம். இது பற்றி ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
பாதிப்பு அதிகமில்லை
உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஹாலந்தில் சிலர் அந்த வைரசால் பாதிக்கபட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே இந்த வைரஸ் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் இந்தியாவில் நுழைந்திருக்கலாம். புதிய உருமாறிய வைரசால் இதுவரை அதிகமானோர் பாதிக்கப்படவில்லை.
எச்சரிக்கை தேவை
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. ஆனாலும் புதிய வைரஸ் வேகமாக பரவக்கூடும் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், எச்சரிக்கையில் மெத்தனம் காட்டினால் ஏராளமான மக்கள் தொற்றுநோய்க்கு ஆளாக நேரிடும். கடந்த நான்கு முதல் ஆறு வாரங்களாக இந்தியாவின் தரவை பார்த்தால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை.
உறுதி எடுக்க வேண்டும்
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா குறைந்து வருகிறது. எனவே உருமாறிய கொரோனா அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சாத்தியமில்லை. ஆனால் நாம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும், உருமாறிய கொரோனா வைரஸை நாட்டில் பெரிய அளவில் வர விடமாட்டோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசிகளுக்கு கட்டுப்படும்
ஸ்பைக் புரதத்திற்கு எதிராக இயக்கப்பட்ட ஆன்டிபாடிகளை உருவாக்குவதன் மூலம் தடுப்பூசிகள் செயல்படுகின்றன. ஸ்பைக் புரதம் ஆன்டிபாடிகளை உருவாக்கும் ஆன்டிஜென் ஆகும். ஆனால் தடுப்பூசி இந்த ஸ்பைக் புரதத்தின் பல தளங்களில் செயல்படுகிறது. தடுப்பூசிகள் செல்-மத்தியஸ்த நோய் எதிர்ப்பு சக்தி அல்லது டி-செல் நோய் எதிர்ப்பு சக்தியையும் உருவாக்குகின்றன. எனவே தடுப்பூசிகள் ஒரு நபருக்கு பல வழிமுறைகளால் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன, எனவே வெளிவரும் தடுப்பூசிகள் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.