நடுங்குகிறது டெல்லி.. காலையிலேயே 3.2 டிகிரி குளிர்.. கொட்டும் பனியில் தவிக்கும் வடமாநில மக்கள்..!
வடமாநிலங்களில் குளிர் கடுமையாக வாட்டி வருகிறது
டெல்லி: நாட்டின் தலைநகரில் நேற்றைய தினம் மிகக் குறைந்த அளவாக 4.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்த நிலையில், இன்றைய தினம் குறைந்த அளவான, 3.2 டிகிரி குளிர் வாட்டியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் குளிர் மற்றும் பனிக் காலம் ஆரம்பமே படுதீவிரமாக உள்ளது.. எப்போதுமே பனியோ, குளிரோ ஆரம்பித்து, ஒருசில வாரங்களுக்கு பிறகுதான் அது மெல்ல மெல்ல தீவிரமாகும்.. ஆனால், இந்த வருடம் அப்படி இல்லை.
குளிர் மற்றும் பனிக் காலம் துவக்கத்திலேயே தீவிரமாகி விட்டதால், பெரும்பாலான வட மாநிலங்களில் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்..
குளிர்
கடந்த மாதங்களில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்த நிலையில், இந்தியாவின் வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் குளிர்காலம் தொடங்கிவிட்டது.. குறிப்பாக, டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்ட ஆரம்பித்தள்ளது.. அதிலும் விடிகாலையில் இந்த குளிரின் தாக்கம் மிக தீவிரமாக காணப்படுகிறது.. இதனால் வெளியே வர முடியாத சூழல் அதிகாலை நேரங்களில் ஏற்பட்டுள்ளது.
மைனஸ் டிகிரி
கிட்டத்தட்ட பெரும்பாலான மாநிலங்களில் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டுவிட்டது.. சில மாநிலங்களில் மைனசுக்கும் கீழே சென்று நடுநடுங்க வைத்து கொண்டிருக்கிறது.. ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பே வெப்பநிலை மைனஸைவிட கீழே சென்றுவிட்டது.. இதில், மேற்கு ராஜஸ்தான் மாநிலம் ஸுரு என்ற இடத்தில் -1.1 டிகிரியாக வெப்பநிலை குறைந்து பதிவானது..
கடும் குளிர்
இமாச்சல பிரதேசம், ஹரியானா, சண்டிகர், மேற்கு உத்தர பிரதேசத்தில் பெரும்பாலான இடங்களில -1.6 டிகிரி முதல் -3.0 டிகிரி வரை பதிவானது.. இதில் பெரும்பாலான மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கும் கடும் குளிர் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது... தலைநகர் டெல்லியை பொறுத்தவரை நேற்றைய தினம், குறைந்தபட்ச வெப்ப நிலையாக 4.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.. அதிகபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியசாக இருக்கும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை 3.2 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது..
காற்றின் வேகம்
ஏற்கனவே வரும் செவ்வாய்க்கிழமை வரை குளிர் அதிகமாக வாட்டும் என்றும் அதற்கு பிறகு மெல்ல மெல்ல குறையும் என்றும் வானிலை நிபுணர்கள் வார்னிங் தந்திருக்கிறார்கள்.. இதற்கு காரணம், வரும் நாட்களில் மேற்கு திசையில் காற்றின் வேகம் மேலும் குறையும் என்பதால், அதன்காரணமாக குளிர்ச்சியின் தாக்கமும் குறையும் என்றார்கள்.. செவ்வாய்க்கிழமைக்கு பிறகு வெப்பநிலை சாதாரணமாக இருக்குமாம்.
வெப்பநிலை
இது குறித்து வானிலை ஆய்வு மைய மூத்த ஆய்வாளர் ஆர்கே ஜெனமணி சொல்லும்போது, "இப்போதைக்கு வட இந்தியா மற்றும் வடமேற்கு இந்தியா முழுவதும் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.. மேற்கு திசையில் இருந்து அதிவேகமாக வீசும் பனிக்காற்று காரணமாக இப்படி குளிர் வாட்டுகிறது.. ஆனால், ராஜஸ்தானில் உள்ள சுரு மற்றும் சிகார் போன்ற பகுதிகளில், வெப்பநிலை இதற்கு நேர்மாறாக குறைந்துள்ளது.
பாகிஸ்தான்
அதே நேரத்தில் அமிர்தசரஸ் மற்றும் பஞ்சாபில், மைனஸ் டிகிரியிலேயே குளிர் காணப்படுகிறது.. பாகிஸ்தானும் கடுமையான குளிரின் பிடியில் சிக்கி உள்ளது.. வடமாநிலங்களில் டிசம்பர் 22-ம் தேதி முதல் அந்த அளவுக்கு குளிர் தாக்கம் இருக்காது.. அதேசமயம், டிசம்பர் 24-ம் தேதிக்கு மேல் மேற்கு பகுதியில் இருந்து காற்றின் திசையில் தீவிரத்தன்மை ஏற்படும்.. இதன்காரணமாக, டிசம்பர் 28,29 தேதிகளில் பகலிலேயே குளிரின் தாக்கம் அதிகமாக தெரியும்" என்றார்.