பிரதமரால் தேர்வு செய்யப்பட்ட பலருக்கும் புரிதலே இல்லை.. 10 சதவீத வளர்ச்சி கட்டாயம்... சுவாமி
டெல்லி: பொருளாதாரத்தை வழிநடத்த பிரதமரால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு புரிதலே இல்லை என்றும் இந்திய பொருளாதாரம் 10 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டியது அவசியம் என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டார்.
டெல்லியில் புதன்கிழமை நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி எம்பி. " நாட்டின் பொருளாதாரத்தை கட்டாயம் மறுசீரமைக்க வேண்டும். இந்திய பொருளாதாரம் 10 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த 10 ஆண்டுகளில் வேலையின்மை பிரச்னைக்குத் தீர்வு காண இயலாது.

இரட்டை இலக்கு
இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிமாக உள்ளது. அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும். அதற்காக, பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும்

பலருக்கும் புரிதல் இல்லை
நாட்டின் பொருளாதாரத்தை பாஜக தலைமையிலான அரசு சரியாக கையாளவில்லை. பொருளாதாரத்தை வழிநடத்த பிரதமரால் தேர்வு செய்யப்பட்ட பலருக்கும் அதுபற்றிய புரிதலே இல்லை. இந்தப் பிரச்னை நிர்மலா சீதாராமன் வரை நீடிக்கிறது.

வேலையின்மைக்கு காரணம்
முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தனது பதவிக் காலத்தில் நடைமுறைப்படுத்திய கொள்கைகளுக்கு இன்று அதிக வேலையின்மை குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ரகுராம் ராஜன் மிகவும் தகுதி வாய்ந்தவர் என்று எல்லோரும் நினைத்தார்கள், ஆனால் அவர் ஒரு பொருளாதார நிபுணர் அல்ல, அவர் ஒரு நிதி நபர். பொருளாதாரத்தில் கூட, மேக்ரோ பொருளாதாரம் தான் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டும் என்று ராஜன் கூறினார். ஆனால் இது நிறுவனங்களின் மூலதனச் செலவை உயர்த்தியது. இதனால் நிறுவனங்கள் பல கடுமையாக சரிந்து விளிம்பு நிலைக்கு சென்றன இப்போது நாம் காணும் அதிக வேலையின்மை விகிதத்துக்கு காரணம் இதுதான்" இவ்வாறு கூறினார்.

சுவாமிக்கு பாராட்டு
முன்னதாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நூலை வெளியிட்டு பேசுகையில், சுப்பிரமணியன் சுவாமியும் நானும் நீண்ட கால நண்பர்கள். சுப்பிரமணியன் சுவாமி மனதில் சரி என்று தோன்றுவதை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாக பேசிவிடுவார்.

வழிமுறைகள் ஏற்புடையவையா
அவர் எழுதியுள்ள இந்த நூலில் நாட்டின் பொருளாதாரம் கடந்த வந்த பாதைகளும், எதிர்கால வளர்ச்சிக்கான தீர்வுகளை கூறியிருக்கிறார். இந்த நூலில் அவர் குறிப்பிடப்பட்ட வழிமுறைகள் ஏற்புடையவையா என்பதை வாசகர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். எனினும் நூலை தெளிவான நடையில் எழுதிய சுப்பிரமணியன் சுவாமியை பாராட்டுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications