மக்கள் பணத்தில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி.. மோடியின் நண்பர்கள் லாபம் பெற கொள்ளை விலை.. ராகுல் ட்வீட்
டெல்லி :பொதுமக்களின் பணத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை மோடியின் நண்பர்கள் அதிக லாபமடைய வேண்டும் என்பதற்காக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இப்போது இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அனுமதி அளிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் மே முதல் வாரத்திலிருந்து பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி விலை
மேலும், மாநில அரசுகளே தடுப்பூசிகளை நேரடியாகக் கொள்முதல் செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும், மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும் மருத்துவமனைகளுக்கு ரூ 600க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து மாநில அரசுகளுக்கு 300 ரூபாய்க்குத் தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என விலை குறைக்கப்பட்டது. அதேபோல கோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸ் மாநில அரசுகளுக்கு ரூ 600க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ 1200 விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

ராகுல் ட்வீட்
கொரோனா தடுப்பூசிகளின் விலை மிகவும் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகப் பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் நண்பர்கள் லாபம் பெறவே கொரோனா தடுப்பூசி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ராகுல் தனது ட்விட்டரில், கொரோனா தடுப்பூசிகளின் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மருந்து நிறுவனங்களுக்கு மக்களின் பணம் வழங்கப்பட்டது.

மோடியின் நண்பர்கள் லாபம்
இப்போது, அதே மக்களை மத்திய அரசு உலகிலேயே அதிக விலைக்குத் தடுப்பூசிகளை வாங்க வைக்கிறது. மோடியின் நண்பர்கள் லாபம் அடைய மீண்டும் ஒரு முறை தோற்றுப்போன இந்த சிஸ்டம், பொதுமக்களைத் தோல்வியடைய செய்துள்ளது" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், இது தொடர்பான செய்திக் குறிப்புகள் சிலவற்றையும் அவர் தனது ட்விட்டரில் இணைத்து வெளியிட்டுள்ளார்.

கோவாக்சின் தடுப்பூசி
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு சுமார் 65 கோடி ரூபாயை மானியமாக வழங்கியுள்ளது. இது போக மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் உதவியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் அரசின் பங்களிப்பும் இருப்பதால் கோவாக்சின் தடுப்பூசியின் காப்புரிமை யாருக்குச் செல்லும் என்பது குறித்துத் தெளிவான தகவல் வெளியாகவில்லை.

சென்ட்ரல் விஸ்டா திட்டம்
முன்னதாக, ராகுல் காந்தி தனது மற்றொரு ட்வீட்டில் மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தையும் விமர்சித்திருந்தார். இந்தியா தற்போதுள்ள நிலையில் சென்ட்ரல் விஸ்டா திட்டம் அத்தியாவசியமில்லை என்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட மத்திய அரசுதான் இப்போதைய நிலையில் அவசியம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் சுமார் 800 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications