இந்தா வந்துருச்சில்ல.. 75 ரூபாய் நாணயத்தை வெளியிடும் மத்திய நிதியமைச்சகம்! ஆஹா அப்படி ஒரு காரணமா?
டெல்லி: நாளை மறுநாள் (மே 28ம் தேதி) புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் நிலையில், இவ்விழாவை நினைவுகூரும் வகையில், 75 ரூபாய் நாணயத்தை நிதி அமைச்சகம் வெளியிட உள்ளது.
பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், நாடு முழுவதும் கருப்பு பணம் அதிகரித்து விட்டதாகவும், இதனை ஒழிக்க அதிரடி நடவடிக்கை தேவைப்படுகிறது என்றும் அடிக்கடி கூறி வந்தது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி திடீரென டிவியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் அதிகரித்துள்ள கருப்பு பணத்தை ஒழிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவித்தார். அதன்படி இன்று முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியிருந்தார்.

மக்கள் இந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். மறுபுறம், பெரும் பணக்காரர்கள் தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற ஏஜென்ட்டுகளை பயன்படுத்தினர். நீண்ட வரிசையில் காத்திருந்த சிலர் அங்கேயே மயக்கமடைந்து உயிரிழந்தனர். இவையனைத்தும் கருப்பு பணத்தை ஒழிக்க மக்கள் செய்த தியாகம் என்று சொல்லப்பட்டது.
இப்படியாக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர், புதியதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இதனை எடுப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கள் சரிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததைவிட இந்த நோட்டுக்களின் புழக்கம் மக்கள் மத்தியில் குறைவாகவே இருந்தது.
இப்போதும் கூட இந்திய கிராமங்களில் ஒரு நாள் வருவாய் 100 ரூபாய் கூட கிடைக்காமல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கும் போது 2,000 ரூபாய் நோட்டுக்கான தேவை எதுவும் பெரியதாக எழவில்லை. எனவே இதன் பயன்பாடு வெகுவாக குறைந்தது. ஒரு கட்டத்தில் அதாவது 2018-2019ம் ஆண்டில் இந்த நோட்டுகள் அச்சடிக்கப்படுவதே முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.
இதனையடுத்து 'தூய்மையான ரூபாய் தாள் கொள்கையின்படி' இந்த ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. மே 23ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை இந்த 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம், இந்த கால கெடுவுக்கு பின்னர் இந்த நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனை மாற்றிக்கொள்ள செப்டம்பர் மாதம் வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. மத்திய அரசின் தவறான முடிவுகளுக்கு இது ஓர் உதாரணம் என்றும் கூறியிருந்தன. இந்நிலையில், தற்போது 75 ரூபாய் நாணயத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிட உள்ளது. மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் நிலையில், இவ்விழாவை நினைவுகூரும் வகையில், இந்நாணயம் வெளியிடப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications