GST: விலை குறைந்த அத்தியாவசிய பொருட்கள்.. மோடி அடித்த அரசியல் சிக்ஸர்.. பக்காவாக போட்ட மாஸ்டர்பிளான்
டெல்லி: மத்திய அரசு அறிவித்துள்ள ஜிஎஸ்டி குறைப்பு, எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் மக்கள் செலவழிக்கும் தொகையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் இந்த வரி குறைப்பு, பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மோடி அரசுக்கு சாதகமாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் நுகர்வை ஊக்குவிக்கும் என்றும், இதனால் மக்கள் செலவழிக்கும் திறன் அதிகரிக்கும் . நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 அன்று ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு வருவதால், அக்டோபர் 20 அன்று வரவுள்ள தீபாவளிப் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே மக்கள் செலவு செய்வது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு - பாஜகவிற்கு அரசியல் ரீதியாக சாதகம்
இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரிச் சலுகையைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி குறைப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது பெரிய பரிசு. இது பீகார், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் பாஜகவுக்கு சாதகமான நிலையை உருவாக்கும். முக்கியமாக தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
தமிழ்நாடு சேமிக்கும் மாநிலம் என்பதை தாண்டி அதிக செலவு செய்யும் மாநிலமாக உருவெடுத்து வருகிறது. பலர் கார் பைக் வாங்குவது, இன்சூரன்ஸ் போன்ற முதலீடுகளை செய்வது என்று நிறைய செலவு செய்கிறார்கள். இப்போது மருத்துவ இன்சூரன்ஸ் 0 சதவிகிதம் ஆக குறைந்து உள்ளது. பல விதமான உடைகளுக்கும் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது.
ஜிஎஸ்டி குறைப்பை எதிர்வரும் தேர்தல் பிரச்சாரங்களின் முக்கிய அம்சமாக பாஜக பயன்படுத்தும். மோடி அரசு பொதுமக்களின் கைகளில் அதிக பணத்தை கொடுத்து, வாங்கும் சக்தியை அதிகரித்துள்ளது என்பதை இது வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது. முக்கியமாக தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி இந்த விலை குறைப்பை பிரச்சாரத்தின் முக்கிய யுக்தியாக பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி சீர்திருத்தம்
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15 அன்று ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை தீபாவளிப் பரிசாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி குறைப்பு விரைவுபடுத்தப்பட்டது. இருப்பினும், பண்டிகைக் காலங்களில் மக்கள் விலை குறைப்பை எதிர்பார்த்து வாங்குவதைத் தவிர்க்காமல் இருக்க, தீபாவளிக்கு முன்பே இதை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசு உணர்ந்து செயல்பட்டு உள்ளது. செப்டம்பர் 22 முதல் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி 5 சதவீதம் அல்லது பூஜ்ஜிய சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டிற்கு இனி ஜிஎஸ்டி கிடையாது. உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் பெரும்பாலான மருந்துகளுக்கும் குறைந்த ஜிஎஸ்டி பொருந்தும், இது பொதுமக்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளிக்கும்.
ஜிஎஸ்டி அமலாக்கம் தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார். புதன்கிழமை அவர் கூறுகையில், "முன்பு மாநிலங்கள் யுபிஏ அரசை நம்பாததால், யுபிஏ ஆட்சியில் ஜிஎஸ்டியை அமல்படுத்த முடியவில்லை.. இப்போது நாங்கள் அதை முறைப்படுத்தி வருகிறோம்" என்றார்.
மேலும், "இந்த வரி குறைப்புகளை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பதை காங்கிரஸ் தீர்மானிக்க வேண்டும்" என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை காங்கிரஸ் விமர்சித்தால், அது மக்கள் விரோத கட்சி என மக்களால் கருதப்படும் என பாஜக நம்புகிறது. "அவர்கள் மக்கள் முன் அம்பலப்படுத்தப்படுவார்கள்" என்று சீதாராமன் தெரிவித்தார். இது எதிர்வரும் மாநிலத் தேர்தல்களில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் காங்கிரசுக்கு கடுமையான சவாலாக அமையும்.












Click it and Unblock the Notifications