குடியரசுத் தலைவர் முர்முவை அவமதித்துவிட்டனர்! சோனியா மன்னிப்பு கேட்கணும்.. பாஜக எம்.பிக்கள் அமளி!
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பியுமான அதிர் ரஞ்சன் சௌத்ரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை விமர்சித்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இது தொடங்கிய நாள் முதல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டன.

இதன் காரணமாக 4 எம்.பிக்கள் கூட்டத்தொடர் முழுவதுமாகவும், 19 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒரு வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் 20 எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் சுமார் 50 மணி நேர தொடர் போராட்டதை முன்னெடுத்துள்ளனர்.
இப்படியான சூழலில் மத்திய அரசை விமர்சிக்கும் பொருட்டு காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பியுமான அதிர் ரஞ்சன் சௌத்ரி குடியரசு தலைவரை 'ராஷ்டிரபத்னி' என கூறியதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தை கிளப்பிய ஸ்மிருதி ராணி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாக காந்தி இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அக்கட்சியை சேர்ந்த எம்.பி ஒருவர் இவ்வாறு பேச அனுமதித்ததன் மூலம் சோனியா காந்தி பழங்குடியின மக்கள் விரோதி, தலித் விரோதி, பெண்கள் நல விரோதியாக மாறியுள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார்.
அதேபோல மறுபுறம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடிக்கத்தொடங்கியுள்ளது. சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து முழக்கமிடும் காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளது. மேலும் இது அப்பட்டமான ஒரு பாலியல் ரீதியிலான விமர்சனம் என்றும், ஒரு பெண்ணான சோனியா காந்தி இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய அதிர் ரஞ்சன் சௌத்ரி, இது வாய் தவறி வந்த வார்த்தை என்று விளக்கமளித்துள்ளார். மேலும், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி, அக்னிபாத் திட்டம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பிற பிரச்னைகள் குறித்த முக்கிய விவாதங்களை திசை திருப்பவே தற்போது இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
"குடியரசுத் தலைவர் யாராக இருந்தாலும் அவர் எங்களுக்கு குடியரசுத் தலைவர்தான். அவர் எந்த சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் எங்களுக்கு அவர் மரியாதைக்குரிய குடியரசுத்தலைவர்தான்." என அதிர் ரஞ்சன் சௌத்ரி விளக்கமளித்துள்ளார். மேலும், "நேற்று விஜய் சவுக்கில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, நாங்கள் எங்கு செல்ல விரும்புகிறோம் என்று செய்தியாளர்கள் எங்களிடம் கேட்டனர். நான் குடியரசுத் தலைவரின் வீட்டிற்குச் (ராஷ்டிரபதி இல்லம்) செல்ல வேண்டும் என்று அவர்களிடம் சொன்னேன். அப்போது வாய் தவறி ராஷ்டிரபத்னி என சொல்லிவிட்டேன். இது தவறுதலாக சொல்லப்பட்ட வார்த்தை, அதை ஒளிபரப்பாமல் இருப்பது நல்லது என ஊடகவியலாளர்களிடம் கூறியிருந்தேன். ஒரேயொரு வார்த்தையில் நான் தவறு செய்துவிட்டேன்" என்றும் டிவிட்டரில் அதிர் ரஞ்சன் பதவிட்டு விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து தனியார் செய்தி ஊடகத்தின் கேள்விக்கு பதிலளித்த சோனியா காந்தி, "அதிர் ரஞ்சன் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே மன்னிப்பு கோரிவிட்டார்" என்று கூறியுள்ளார். பாஜக தொடங்கியுள்ள போராட்டத்தின் காரணமாக மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications