தி கேரளா ஸ்டோரி பட பாதுகாப்பு- தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்! மே.வங்கத்துக்கு டோஸ்!
டெல்லி: நாட்டின் அனைத்து இடங்களிலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகிவிட்ட நிலையில் மேற்கு வங்கத்தில் மட்டும் தடை விதித்தது ஏன்? மேற்கு வங்கம் மட்டும் இந்தியாவில் இருந்து தனித்தா இருக்கிறது? என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து பெண்கள் கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுகின்றனர்; பின் ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களில் பாலியல் அடிமைகளாக்கப்படுகின்றனர் என்பதை அடிப்படையாக கொண்டிருக்கிறது இந்த திரைப்படம். இத்திரைப்படத்துக்கு தடை விதிக்க ஏற்கனவே உச்சநீதிமன்றம் மறுத்தது. பின்னர் கேரளா உயர்நீதிமன்றமும் மறுத்தது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் கதவுகள் மீண்டும் தட்டப்பட்டுள்ளன.

இதனிடையே மேற்கு வங்க மாநிலத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தடை செய்யப்படுவதாக மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்தார். தமிழ்நாட்டில் எதிர்ப்பின் காரணமாக தி கேரளா ஸ்டோரி திரையிடப்படமாட்டாது என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர். இதனை எதிர்த்து அதாவது மேற்கு வங்கத்தின் தடையை எதிர்த்தும், தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரையிட பாதுகாபு வழங்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பாளர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மேற்கு வங்க அரசு மட்டும் ஏன் தடை விதித்தது? மேற்கு வங்கம் மட்டும் இந்தியாவில் இருந்து தனித்தா இருக்கிறது? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மேலும் தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுகள் மே 15-ந் தேதிக்குள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications