அனைத்து காசநோய் நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த மத்திய அரசு உத்தரவு
டெல்லி: இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து காசநோய் நோயாளிகளுக்கும் கோவிட் ஸ்கிரீனிங் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதேபோல் அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் காசநோய் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மத்திய உடல்நலம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) (சுகாதார துறை அமைச்சகம்) காசநோய்-கோவிட் பரிசோதனை மற்றும் திரையிடல் குறித்த வழிகாட்டுதல் குறிப்பை வெளியிட்டுள்ளது.
ஏனெனில் காசநோய் மற்றும் கோவிட் -19 ஆகிய இரண்டும் முதன்மையாக நுரையீரலைத் தாக்குகின்றன. மேலும் கோவிட் -19 நோயாளிகளில் காசநோய் பாதிப்பு 0.37 - 4.47 சதவிகிதமாக உள்ளதாக வெவ்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

காசநோய் நோயாளி
கோவிட் -19 தொற்றுநோயால், முந்தைய ஆண்டை விட 2020 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் காசநோய் பாதிப்பு 26 சதவீதம் குறைந்துள்ளது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காசநோய் கடுமையான கொரோனா நோய்க்கான 2.1 மடங்கு அதிக அபாயத்துடன் தொடர்புடையது. கூடுதலாக, காசநோய் நோயாளிகளுக்கு இவை பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே காசநோய் உள்ளவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழிவு, புகைபிடித்தல், எச்.ஐ.வி போன்ற நோய்களுடன் இருக்கிறார்கள்.

யாருக்கெல்லாம் பரிசோதனை
எனவே, புதிதாக கண்டறியப்பட்ட காசநோய் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று மத்திய குடும்ப நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் தற்போது சிகிச்சையில் உள்ள காசநோயாளிளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அத்துடன் காசநோய் சிகிச்சை தடையின்றி தொடர வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

மார்பு எக்ஸ்ரே
அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் காசநோய் அறிகுறிகள் உள்ளனவா என்று சோதிக்கப்பட வேண்டும். குறிப்பாக 2 வாரங்களுக்கு மேல் இருமல், 2 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல், குறிப்பிடத்தக்க எடை இழப்பு, இரவு வியர்வை போன்றவை உள்ளவர்களை சோதிக்க வேண்டும். காசநோயை கண்டறியும் மார்பு எக்ஸ்ரே மற்றும் வெளிப்படையான அணுசக்தி பெருக்க சோதனை (NAAT) - CBNAAT / TrueNat) ஆகியவை மேற்கொள்ள வேண்டும்.

யாருக்கு அவசியம்
காசநோய்- கொரோனா ஆகிய இரு நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனியாக கண்டறிந்து - கோவிட் தனிமைப்படுத்தும் மையங்களில் காசநோய் சேவை வசதிகளை அவர்களுக்கு அளிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கடுமையான சுவாச பாதிப்பு உள்ளவர்களுக்கும் காசநோய்க்கான பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று சுகாதார துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75,760 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 33 லட்சத்தை தாண்டி உள்ளது என்றும் மத்திய சுகாதார நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1,023 பேர் ஒரே நாளில் இறந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை கொரோனாவால் 60,472 பேர் பலியாகி உள்ளனர். நாட்டில் 7,25,991 ஆக்டிவ் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் . 25,23,772 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,10,235 ஆக உயர்ந்துள்ளது.

9,24,998 மாதிரிகள் பரிசோதனை
நாட்டிலேயே அதிகபட்சமாக 1,73,195 நோயாளிகளுடன் , மகாராஷ்டிரா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக முதல் இடத்தில் உள்ளது. 23,089 நோயாளிகள் மாநிலத்தில் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) வெளியிட்ட தகவலின்படி,, புதன்கிழமை ஒரு நாளில் 9,24,998 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 3.85 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications