"வாவ்".. விரைவில் வருகிறது படுக்கைகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில்கள்.. 887 பேர் பயணிக்க முடியுமாம்!
டெல்லி: அதிநவீன சொகுசு ரயிலாக அறியப்படும் 'வந்தே பாரத்' ரயில்களை இனி படுக்கை வசதிகளுடன் தயாரிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட 'வந்தே பாரத்' ரயில்கள் யாவும் அமர்ந்து கொண்டு பயணிக்கும் வகையிலேயே இருந்த நிலையில், நீண்டதூர பயணத்துக்காக படுக்கை வசதிகளுடன் கூடிய ரயில்கள் வடிவமைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில்கள் நீண்டதூர வழித்தடங்களில் விரைவில் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மக்களை ஈர்க்கும் வந்தே பாரத் ரயில்கள்
இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் 'வந்தே பாரத்' ரயில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. டெல்லி - வாரணாசி, டெல்லி - காத்ரா, குஜராத் மாநிலம் காந்திநகர் - மும்பை, இமாச்சலப் பிரதேசத்தின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி, கர்நாடகாவின் மைசூரு - சென்னை உட்பட 5 'வந்தே பாரத்' ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது 6-வது 'வந்தே பாரத்' ரயிலை தயாரிக்கும் பணியில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலை ஈடுபட்டுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படும் ரயில் என்பதால், இந்திய மக்கள் மத்தியில் இந்த ரயிலுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

விமர்சனங்களும் அதிகம்
மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ள போதிலும், அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருவதால் 'வந்தே பாரத்' ரயில்கள் அதிக அளவில் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகின்றன. பல்வேறு ரயில் தடங்களில் ஓடிய 'வந்தே பாரத்' ரயில்கள் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ரயில்களின் முன்பகுதிகள் கடுமையாக சேதம் அடைந்தன. ஃபைபர் பிளாஸ்டிக்கால் 'வந்தே பாரத்' ரயிலின் முகப்பு பாகங்கள் செய்யப்பட்டுள்ளதால் அவை இவ்வாறு சேதம் அடைகின்றன. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகின.

தூங்கும் வசதியுடன்..
இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட'வந்தே பாரத்' ரயில்கள் யாவும், அமர்ந்து செல்லும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டவை ஆகும். குறைந்த தூரத்துக்கு இயக்கப்படுவதால் படுக்கை வசதிகள் இல்லாமல் 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நீண்ட தூர பயணத்துக்கான 'வந்தே பாரத்' ரயில்கள் படுக்கை வசதிகளுடன் தயாராகி வருகின்றன. இவ்வாறு 200 'வந்தே பாரத்' ரயில்கள் தயாரிக்கப்படவுள்ளன.

என்னென்ன வசதிகள்?
தூங்கும் வசதி கொண்ட இந்த 'வந்தே பாரத்' ரயிலில் 16 பெட்டிகள் இருக்கும். 11 மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள், 4 இரண்டு அடுக்கு ஏசி பெட்டிகள், ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டி இடம்பெற்றிருக்கும். மூன்று அடுக்கு ஏசி பெட்டியில் 61 படுக்கைகளும், இரண்டு அடுக்கு ஏசி பெட்டியில் 48 படுக்கைகளும், முதல் வகுப்பு ஏசி பெட்டியில் 24 படுக்கைகளும் இருக்கும். இப்பெட்டிகளில் மாற்றுத்திறனாளி பயணிப்பதற்கான வசதியும் செய்து தரப்படும். ஒரு ரயிலில் மொத்தம் 887 பேர் பயணிக்கலாம். இதுதவிர, ஒவ்வொரு பெட்டியிலும் மாற்றுத்திறனாளிகளின் உதவியாளருக்கும் ஓர் இடம் ஒதுக்கப்படும். தூங்கும் வசதி கொண்ட 'வந்தே பாரத்' ரயில்களை தயாரிப்பதற்காக 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ரயில்வே துறை ஒப்பந்தப்புள்ளிகளை கோரவுள்ளது. புதிய 'வந்தே பாரத்' ரயில்களை சென்னை ஐசிஎஃப் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் உள்ள மராத்வாடா தொழிற்சாலைகள் தயாரிக்கவுள்ளன.












Click it and Unblock the Notifications