வெறுப்பு பேச்சு வழக்கு.. எவ்வளவு உத்தரவு போட்டாலும் பின்பற்றுவதில்லை.. உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அனிருத்தா போஸ் மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வெறுப்பு பேச்சுகள் மீதான நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்திருந்தது.
டெல்லி: வெறுப்பு பேச்சுகள் குறித்து எத்தனை முறை உத்தரவு பிறப்பித்தாலும் அது சரியாக பின்பற்றப்படுவதில்லை என்றும், இது தொடர்பாக யாரும் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வெறுப்பு பேச்சுகள் சமீப காலங்களாக தொடர்ந்து அதிகரித்து வருவதாக அடிக்கடி உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. இந்த வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகளில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டிருந்தது. இதில் மாநில அரசுகளுக்கு சில அறிவுறுத்தல்கள் இடம்பெற்றிருந்தன.
அதாவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பற்ற தேசத்தை உருவாக்குவதை கருத்தில் கொண்டு உத்தரப் பிரதேசம், டெல்லி மற்றும் உத்ரகாண்ட் மாநில அரசுகள் வெறுப்பு பேச்சுகளை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது. அதேபோல இது ஒரு தீவிரமான பிரச்சனை என்றும், எனவே இதில் உறுதியான நடவடிக்கை எடுக்க தவறுவது என்பது நீதிமன்ற அவமதிப்புக்கு வழி வகுக்கும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது.
கேள்வி
இது இப்படி இருக்க கடந்த 13ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் டெல்லி காவல்துறையினருக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வியெழுப்பியிருந்தனர். அதாவது, கடந்த 2021ம் ஆண்டு டெல்லியில் 'இந்து யுவ வாஹினி' அமைப்பு சார்பில் பேரணி ஒன்று நடைபெற்றிருக்கிறது. இந்த பேரணியில் பங்கேற்றவர்கள் இஸ்லாமிய சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் பேசியுள்ளதை போன்று சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் பரவின. இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் இந்த புகார்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவில்ல.
கைது
இதனையடுத்து புகார் கொடுத்தவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தனர். புகார் தொடர்பாக காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கோரியியிருந்த நிலையில், 'வெறுப்பு பேச்சுகளா? அப்படியெல்லாம் ஏதுமில்லை. சட்டத்திற்கு புறம்பாக யாரும் பேசவில்லை' என்று அறிக்கை தாக்கல் செய்தது. இதனை கண்டு அதிர்ந்த நீதிமன்றம் வீடியோவாக ஆதாரம் கையில் இருக்க இப்படி ஏன் பொய் சொல்கிறீர்கள் என்ற சரமாரியாக கேள்வியெழுப்பியது. அத்துடன் இல்லாமல் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவும் பிறப்பித்தது. ஆனால் இந்த உத்தரவு வந்த 5 மாதங்கள் கழித்துதான் டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
விமர்சனம்
இந்த விவகாரங்களை எல்லாம் நோட் செய்த நீதிமன்றம் டெல்லி காவல்துறையை கடுமையாக விமர்சித்தது. இது இவ்வாறு இருக்க வெறுப்பு பேச்சு தொடர்பாக நேற்று மீண்டும் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை பார்த்த நீதிபதிகள் "வெறுப்பு பேச்சு விவகாரம் குறித்து யாரும் உறுதியான நடவடிக்கை எடுப்பதில்லை" என்று கூறியுள்ளனர். அதாவது 'இந்து ஜன் ஆக்ரோஷ் மோர்ச்சா' எனும் அமைப்பு சார்பில் மும்பையில் வரும் 5ம் தேதி நிகழச்சி ஒன்று நடக்க இருக்கிறது. இதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மட்டுமல்லாது இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.
ஒவ்வொரு முறையுமா?
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அனிருத்தா போஸ் மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று மனுவை விசாரிப்பதாக ஒப்புக்கொண்டது. ஆனால், "வெறுப்பு பேச்சுகள் குறித்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு பேரணிக்கு நீதிமன்றத்தை அணுகுவதை நினைத்து பாருங்கள். இது தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே தெளிவான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறோம். இந்த உத்தரவுகளை பின்பற்றாமல் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவது எங்களை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்குகிறது. ஒவ்வொரு நிகழ்வின் அடிப்படையிலும் உத்தரவை பிறப்பிக்க சொல்லி நீதிமன்றத்தை கேட்கக்கூடாது" என்று கூறியுள்ளனர்.