பிரேக்கிங்.. பிரேக்கிங்! சலித்துப்போன மக்கள்.. இனி தூர்தர்ஷன் பாணிதான் வேணுமாம்.. ஆய்வில் தகவல்
டெல்லி: செய்தி ஊடகங்களை பார்க்கும் மக்கள், 'தூர்தர்ஷன்' (பொதிகை) போன்ற பழைய செய்தி ஊடகங்களை மீண்டும் எதிர்பார்க்கின்றனர் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
அதேபோல தற்போது உள்ள தனியார் ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளில் பெரும்பாலான மக்கள் நம்பிக்கை வைத்திருக்கவில்லை.
இணையதளத்தை பயன்படுத்தும் மக்கள் முதலில் வாட்ஸ் அப் வழியாக வரும் செய்திகளையும், அடுத்து யூடியூப் செய்திகளையும் அதிகம் நம்புகின்றனர். பேஸ்புக் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆய்வு
சமீப நாட்களாக இந்தியாவில் செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளின் தரம் குறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். எப்போதும் பிரேக்கிங் என மக்களை எந்நேரமும் பரபரப்புடன் வைத்திருக்க வேண்டும் என இந்த செய்தி நிறுவனங்கள் செயல்படுவதாக சமூக வலைத்தளங்களில் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் 'லோக்நிதி-சிஎஸ்டிஎஸ்' எனும் அமைப்பு ஒன்று செய்திகளுக்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்து நாட்டின் 19 மாநிலங்களில் ஆய்வை மேற்கொண்டது.

செய்திகள்
தற்போது இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதாவது இந்தியாவில் செய்திகளை பார்க்கும் மக்களில் 49-50 சதவிகிதமானோர் 'புல்ட்டின்' எனப்படும் அன்றாட செய்திகளை விரும்பி பார்க்கின்றனர். அதேபோல பரபரப்பாக நடத்தப்படும் விவாதங்களை 12 சதவிகிதத்தினர் பார்க்க விருப்பப்படுகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை தவிர்த்து இணைய பயன்பாட்டின் மூலமாக செய்திகளை பார்ப்பவர்கள் குறித்த ஆய்வுகளும் வெளியாகியுள்ளன.

துர்தர்ஷன்
அதாவது இணையத்தை பயன்படுத்தும் 90 சதவிகிதத்தினருக்கும் அதிகமானோர் சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்கள் மூலமாக செய்திகளையும் அவர்கள் பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் தனியார் செய்தி ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் போர்ட்டல்களை காட்டிலும் 'தூர்தர்ஷன்' (பொதிகை) போன்ற அரசு செய்தி ஊடகத்தையே பெரிதும் நம்புகின்றனர். மறுபுறம் செய்தி தாள்களை நம்புகின்றனர். சரியாக சொல்வதெனில், செய்தி வழங்கும் முறை பழைய பாணிக்கு திரும்ப வேண்டும் என்றே பலரும் விருப்பப்படுகின்றனர்.

வாட்ஸ்அப்
மேலும், மற்ற சமூக வலைத்தளத்தை விட வாட்ஸ்அப் மீது மக்கள் அதிகம் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இந்த செயலியை பயன்படுத்துபவர்களில் 59 சதவிகிதம் பேர் இதனை நம்புவதாக கூறியுள்ளனர். 13 சதவிகிதம் பேர் நம்பிக்கை இல்லையென்று கூறியுள்ளனர். இதற்கடுத்து யூடியூப்தான் நம்பகத் தகுந்த சமூக வலைத்தளமாக இருக்கிறது. டிவிட்டரை பயன்படுத்துபவர்களில் 54 சதவிகிதமானோர் இதனை நம்புகின்றனர். 12 சதவிகிதம் பேர் நம்பிக்கை இல்லையென கூறியுள்ளனர். எப்படியாயினும் பெரும்பாலான சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் அதில் வரும் செய்திகளை நம்புவதில்லை என்று தெரிய வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications