பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல்! ஜன.31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது!
டெல்லி: 2022-2023-ம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வானது ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல் இரண்டாவது அமர்வு கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனிடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜனவரி 31-ம் தேதி, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் என்ன மாதிரியான அறிவிப்புகள், சலுகைகள் இடம்பெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்திருக்கிறது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் வருவதால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பிரதமர் தொடங்கி மத்திய அமைச்சர்கள் வரை ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதற்கு தகுந்தபடி பட்ஜெட் கூட்டத்தொடர் இடைவெளி விட்டு நடத்தப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் அண்மையில் தான் நிறைவு பெற்றது. அதில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு இடையே 9 மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளிகளை சமாளிக்கும் வகையில் அதற்கான முன் தயாரிப்புப் பணிகளில் மத்திய அமைச்சர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு கூடுதல் ரயில்கள், சுகாதாரத்துறை மற்றும் விவசாய மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி உள்ளிட்டவைகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications