பிஜேபி.. ! ஹட்டோ..! கொல்கத்தா பிரம்மாண்ட மாநாட்டில் முழங்கிய மமதா பானர்ஜி
Recommended Video
கொல்கத்தா:வரும் லோக் சபா தேர்தலை தொடர்ந்து... யார் பிரதமராக வரப்போகிறார்கள் என்பதை பற்றிய கவலை எனக்கில்லை.பாஜக அரசை அகற்றுவது தான் தனது ஒரே குறிக்கோள் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மமதா பானர்ஜி ஆவேச முழக்கமிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச்சில் வெளியாகும் என்று தெரிகிறது. இதையொட்டி இப்போதே தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
உத்தரபிரதேசத்தில் சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அதேவேளையில், மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பேரேடு மைதானத்தில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டது. அதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சிகள் ஒன்று கூடின
அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் ஒன்று திரண்டதால் எதிர்க் கட்சிகளின் எழுச்சி மாநாடாக இந்த மாநாடு பார்க்கப்படுகிறது. மாநாட்டில் பேசிய அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் பாஜக அரசை மத்தியில் இருந்து அகற்ற வேண்டும் என்று பேசினார்.
மமதா பானர்ஜி எழுச்சி உரை
மாநாட்டு முடிவில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மமதா பானர்ஜி எழுச்சி உரையாற்றினார். ஆங்கிலம், இந்தி, வங்கம் என 3 மொழிகளில் அவர் பாஜகவை சரமாரியாக குற்றம்சாட்டி பேசினார்.
ஒன்றிணைந்தது எதற்காக?
மாநாட்டில் அவர் பேசியதாவது:நாட்டுக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும், நாங்கள் இங்கே ஒன்றிணைந்து உள்ளோம். மேற்கு வங்க தேர்தலில் பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது. அதே நிலைமை கேரளாவிலும் உருவாகும்.
அச்சீ தின் என ஏமாற்றினர்
கடந்த நான்கரை ஆண்டுகளில் பாஜக அரசில் வேலைவாய்ப்பின்மை முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. அச்சீ தின் வரும் என்று சொல்லி ஏமாற்றிவிட்டீர்கள்.
முடிவுக்கு வருகிறது ஆட்சி
நீங்கள் சொன்ன அச்சீ தின் என்ற காலம் பாஜகவுக்கு முடிந்துவிட்டது. பாஜகவுக்கான காலம் என்பது தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. விவசாயிகள், உழைப்பாளிகள், பெண்கள், இளைஞர்களை பாதுகாக்க வேண்டும் என்பதே குறிக்கோள்.
யார் பிரதமராக வருவார்கள்?
யார் பிரதமராக வருவார்கள் என்று பார்க்காதீர்கள். தற்போது பிரதமர் பதவி யாருக்கு என்பதையும் மறந்துவிடுங்கள்.. நமது குறிக்கோள் மத்தியில் உள்ள பாஜகவை அகற்றுவது ஒன்றே தான்.
பாஜக தவறிவிட்டது
2014ம் ஆண்டு பிரச்சாரத்தின் போது ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கில் 15 லட்சம் தருவேன் என்று கூறி ஏமாற்றிவிட்டது பாஜக அரசு. அப்போது முதல் அவர்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் பாஜக தவறி விட்டது.
2 மடங்கு சம்பளம்
இனி நாங்கள் ஆட்சியமைத்தால்.. வரும் 2022ம் ஆண்டில் நாங்கள் உங்கள் அனைவருக்கும் இரண்டு மடங்கு ஊதியம் கிடைக்கும் அளவுக்கு முன்னேற்றத்தை உருவாக்குவோம் என்று உறுதியளிக்கிறோம். நமது நாட்டுக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத பிரதமர் தான் தற்போது உள்ளார்.
ஒரே நோக்கம் தான்
பாஜகவை அப்புறப்படுத்துவது மட்டுமே நமது நோக்கம். அந்த முயற்சியில் இருந்து நாம் பின்வாங்கக்கூடாது. அவர்களின் காலம் முடிவுறும் தருவாய் வந்துவிட்டது என்று மமதா பானர்ஜி ஆவேசமாக பேசினார். பேச்சின் முடிவில்.. பாஜகவினர் கூறுவது போல ஜெய்ஹிந்த் என்று கூறி தொண்டர்களை பார்த்து உற்சாக முழக்கமிட்டார்.