8-வது ஊதியக்குழு.. பல லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் கனவு.. நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்
டெல்லி: பல லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இடியாக ஒரு செய்தி வந்துள்ளது.. மத்திய அரசு ஊதிய உயர்வு தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே வந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக்குழு அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் 30 லட்சம் என்கிற அளவில் மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்க பரிந்துரை வழங்கும் ஊதியக்குழு, 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை அமைக்கப்படுவது வழக்கம் ஆகும். கடந்த 7-வது ஊதியக்குழு, 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள், 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதன்படி மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்களில் கடைநிலை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக 18000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஊதியக் குழுவின் படி, ஒரு ஊழியரின் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.7000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, ஓய்வூதியத் தொகையும் 2.57 மடங்கு அதிகரித்தது . மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500ல் இருந்து ரூ.9,000 ஆக உயர்ந்தது.
7வது ஊதியக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட அதிகபட்ச ஊதியம் ₹2,25,000 ஆகும். கேபினட் செயலாளர் மற்றும் அதே நிலையில் உள்ள மற்ற உயர் பதவிகளில் உள்ளவர்களின் ஊதியம் ₹2,50,000 இல் தொடங்குகிறது. மத்திய அரசு ஊழியர்களின் ஆண்டு சம்பள அதிகரிப்பு விகிதம் 3% ஆக இருக்கிறது. இதுதவிர ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய 2 தவணைகளுக்கான அகவிலைப்படி உயர்வுகள் வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
10 வருடங்களுக்கு ஒருமுறை ஊதிய பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் நிலையில், 8-வது ஊதியக்குழு பரிந்துரைகள் 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும். அதற்கு தற்போது ஊதிய பரிந்துரைக்குழு அமைக்கப்பட வேண்டும். ஆனால் இதுபற்றி மத்திய அரசு எந்த பதிலும் இதுவரை அளிக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில் ராஜ்யசபாவில் நேற்று நேரத்தில், 8-வது ஊதியக்குழு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, "மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு அமைக்கக்கோரி கடந்த ஜூன் மாதம் 2 மனுக்கள் பெறப்பட்டன. இருப்பினும், 8-வது ஊதியக்குழு அமைக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை" என்றார்.
இதன் மூலம் அரசு 8வது ஊதியக்குழு அமைக்கும் முடிவில் தற்போதைக்கு இல்லை என்பது தெளிவாகி உள்ளது. மத்திய அரசு 8வது ஊதியக்குழு அறிவித்தால் தான், மாநில அரசும் அதனை பின்பற்றி ஊதிய குழு அறிவிக்கும் என்கிற நிலை உள்ளது. இப்போது மத்திய அரசு அதுபற்றி திட்டம் இல்லை என்று அறிவித்துள்ளதால், மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு இப்போதைக்கு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications