ஸ்டாலின்.. சந்திரபாபு நாயுடு.. சந்திரசேகர ராவ்.. டெல்லி அரசியலை தீர்மானிக்கும் மும்மூர்த்திகள்!
டெல்லி அரசியலை தென்னிந்தியாவை சேர்ந்த மூன்று அரசியல் தலைவர்கள் தீர்மானிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
டெல்லி: டெல்லி அரசியலை தென்னிந்தியாவை சேர்ந்த மூன்று அரசியல் தலைவர்கள் தீர்மானிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் டெல்லி அரசியல் தென்னிந்தியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. காமராஜர், ராஜாஜி, தேவ கவுடா, கருணாநிதி, ஜெயலலிதா என்று தென்னிந்திய தலைவர் சொல்லும் நபர்களே வடஇந்தியாவில் ஆட்சி செய்து வந்தனர்.
ஆனால் காலப்போக்கில் தென்னிந்தியாவின் பிடி தளர்ந்தது. பீகார், உத்தர பிரதேசம் என்று வடஇந்தியா டெல்லியை கட்டுப்படுத்த தொடங்கியது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், அந்த பிடி மீண்டும் தென்னிந்தியா வசம் வந்துள்ளது.

மூன்று பேர்
தமிழகத்தை சேர்ந்த திமுக தலைவர் ஸ்டாலின், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா ராஷ்டிர சமிதியை சேர்ந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர்தான் தேசிய அரசியல் தீர்மானிக்க போகும் அந்த மும்மூர்த்திகள். பாஜக, காங்கிரஸ் என்று அனைத்து கட்சிகளும் இவர்களின் அடுத்த அரசியல் நடவடிக்கை என்ன என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது.

சந்திரபாபு நாயுடு அரசியல்
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுதான் இதை தொடங்கி வைத்தது. அவர்தான் முதன்முதலாக பாஜகவிற்கு எதிராக பெரிய கூட்டணியை உருவாக்கும் முடிவிற்கு வந்தார். பாஜகவிற்கு உண்மையாகவே இந்த திட்டம் பெரிய அதிர்ச்சியை அளித்தது. வெறும் எண்ணத்துடன் மட்டுமில்லாமல் காங்கிரஸ், திமுக என்று முக்கிய எதிர்க்கட்சிகள் பலவற்றை இவர் ஒன்றாக இணைத்தும்விட்டார்.

இன்னொரு பக்கம் சந்திரசேகர ராவ்
தெலுங்கானா ராஷ்டிர சமிதியை சேர்ந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்னொரு பக்கம் பாஜக, காங்கிரஸ் என்று இரண்டு கட்சிகளுக்கும் வேறு விதமான அதிர்ச்சியை அளித்து வருகிறார். காங்கிரஸ் பாஜக இல்லாத, மூன்றாவது அணியை உருவாக்கும் தீவிர முயற்சியில் இவர் இருக்கிறார். இதற்காக ஏற்கனவே இவர் மமதா பானர்ஜி, நவீன் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துவிட்டார். இன்னும் சில தலைவர்களை சந்திக்க போகிறார்.

ஸ்டாலின் என்ன செய்கிறார்
திமுக தலைவர் ஸ்டாலின் கிட்டத்தட்ட தேசிய அரசியலின் தளபதி ஆகிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்க்கட்சி வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்ததன் மூலம் பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளார். அதேபோல் சில மாநில கட்சிகளுக்கும் ஸ்டாலின் பெரிய அதிர்ச்சி அளித்து இருக்கிறார். டெல்லியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் இவருக்கு அளிக்கும் சிறப்பு மரியாதையை பார்த்து மற்ற கட்சிகளே வாயை பிளந்துள்ளது.

இனி இவர்கள்தான்
இவர்கள் நேரிடியாக தேசிய அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும், இனி இவர்கள் என்ன செய்ய போகிறார்களோ அதுதான் தேசிய அரசியல் என்ற நிலை கிட்டத்தட்ட உருவாகிவிட்டது. இவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள், யாருடன் கூட்டணிக்கு முயற்சி செய்வார்கள் என்பதை பொறுத்தே 2019 லோக் சபா தேர்தல் உள்ளது. இதனால் டெல்லி மீண்டும் ஒருமுறை தென்னிந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications