“எனக்கு சவக்குழி தோண்ட எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டுகின்றன” - பிரதமர் மோடி பரபர பேச்சு!
டெல்லி: "சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்காக, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்ததால் எனக்கு சவக்குழி தோண்டப் பார்க்கின்றனர். இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதால் எதிர்க்கட்சிகள் எனக்கு சவக்குழி தோண்டப் பார்க்கிறார்கள்" என மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்ற பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற மக்களவைக்கு வந்திருந்தார். அவையில் நடந்த அமளியால், பிரதமர் மோடி உரை நிகழ்த்தாமல் சென்றுவிட்டார். இது தொடர்பாக விளக்கமளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கையை அடைந்து எதிர்பாராத ஏதோ ஒன்றைச் செய்யலாம் என்று எனக்கு உறுதியான தகவல் கிடைத்தது. இதைத் தவிர்க்கவே, பிரதமரைச் சபைக்கு வருவதைத் தவிர்க்குமாறு நான் கேட்டுக்கொண்டேன்" எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து மக்களவையில் பிரதமரின் உரை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், பிரதமர் மோடி மாநிலங்களையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் இன்று உரையாற்றினார். அப்போது, "இன்று, உலகம் ஒரு புதிய உலக ஒழுங்கை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலைகளையும் நிலவரங்களையும் அரசியல் சார்பின்றி நாம் பகுப்பாய்வு செய்யும்போது, இந்தியாவின் மீது நாட்டம் அதிகரித்து வருவதை தெளிவாகக் காண முடிகிறது.
உலகின் நண்பனாகவும், உறவினராகவும் திகழ்வதோடு, இன்று இந்தியா பல நாடுகளுக்கு ஒரு நம்பகமான பங்காளியாக உருவெடுத்துள்ளது. இன்று தேசம் சீர்திருத்த விரைவு ரயிலில் ஏறிவிட்டது என்பதே யதார்த்தம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நீதிமன்றங்களை அணுகுவதன் மூலம் ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரத்தைப் பற்றி மட்டுமே கவலை இருக்கிறது.
எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் செய்கின்றனர்; நாட்டிற்கான அரசியலை செய்யவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு நாட்டின் வளர்ச்சி பற்றி ஆழ்ந்த சிந்தனையோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லை. இந்தியாவின் வளர்ச்சி குறித்து எதிர்க்கட்சிகளுக்கு கவலை இல்லை.
சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்காக, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்ததால் எனக்கு சவக்குழி தோண்டப் பார்க்கின்றனர். இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதால் எதிர்க்கட்சிகள் எனக்கு சவக்குழி தோண்டப் பார்க்கிறார்கள்" என ராஜ்யசபாவில் இன்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications