என் தலைமுடியை கூட அவர்களால் தொட முடியாது.. சதியை தவிடுபொடி ஆக்குவேன்.. மஹுவா மொய்த்ரா ஆவேசம்!
டெல்லி: என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவோரால், எனது தலைமுடியைக் கூட தொட முடியாது என திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடி, உள்துறை அமித் ஷா ஆகியோர் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவர்களில் முக்கியமானவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா. குறிப்பாக, இவர் அதானியை டார்கெட் செய்து அவரது வளர்ச்சிக்கு பாஜக அரசு உதவுவதாக புள்ளிவிவரங்களுடன் பேசும் பேச்சால் ஒட்டுமொத்த அவையும் பரபரக்கும்.

இந்நிலையில், மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானி குறித்து கேள்வி எழுப்புவதற்காக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் பணம், பரிசுப் பொருள்களை லஞ்சமாகப் பெற்றதாக பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே பகிரங்கமாக குற்றம்சாட்டினார். மேலும், மஹுவா மொய்த்ரா தனது நாடாளுமன்ற ஐ.டியை துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஹிரானந்தானியிடம் பகிர்ந்து கொண்டதாகவும், அவர் அங்கிருந்தே லாகின் செய்து கேள்விகளை பதிவு செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.
இது குறித்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நிஷிகாந்த் துபே புகார் கடிதம் எழுதியதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, நவம்பர் 2-ம் தேதி நேரில் ஆஜராக அவருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இருந்து தன்னை வெளியேற்ற நினைப்பவர்களால் தனது தலைமுடியைக்கூடத் தொட முடியாது என மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
தங்களின் ஐபோன்கள் உளவு பார்க்கப்படுவதாக எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அலர்ட் மெசேஜ் அனுப்பியது குறித்து ஒரு பேட்டியில் பேசிய மஹுவா மொய்த்ரா, "எதிர்க்கட்சி எம்.பிக்கள் வைத்திருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் அத்துமீறி ஊடுருவும் முயற்சி நடப்பதாக அந்நிறுவனம் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறது. 2021-ல், உளவு பார்ப்பதற்காக இஸ்ரேலிலிருந்து பெகாசஸ் ஸ்பைவேரை அவர்கள் கொண்டுவந்தார்கள்.
இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றது. ஆனாலும், அதில் எதுவுமே வெளிவரவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரண்டாவது முறையாக தற்போது மீண்டும் நடக்கிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சி எம்.பிக்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவது அரசு நடத்தும் தாக்குதல் என்றே கருத முடியும்.
இதுபோன்ற ஒரு நிகழ்வு நேரும்போது நாடாளுமன்ற சபாநாயகர் தானாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இ-மெயில் லாகின் குறித்துதான் அதிகம் பேசப்படுகிறது. இது முழுக்க முழுக்க குப்பையான விஷயம். என்னைக் குறிவைத்து சதி நடக்கிறது. எனக்கு எதிரான சதியை நான் தவிடுபொடி ஆக்குவேன். என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றவும், சஸ்பெண்ட் செய்யவும் விரும்புகிறார்கள். அவர்களால் எனது தலைமுடியைக் கூட தொட முடியாது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications