டிரெஸ்ஸை கிழிச்சிட்டாங்க.. டெல்லியை புரட்டி போட்ட ஜோதிமணி.. கோபப்பட்ட சசி தரூர்.. நடந்தது என்ன?
டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியின் ஆடை கிழிக்கப்பட்டதாக வைக்கப்பட்ட புகார் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு காங்கிரஸ் நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள் ஜோதிமணிக்கு ஆதரவாக குதித்துள்ளனர்.
Recommended Video
நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது. கடந்த 3 நாட்கள் நடந்த விசாரணையில், அப்போது அவரிடம் மொத்தமாக 31 மணி நேரம் கேள்விகள் கேட்கப்பட்டது.
அவருக்கு நாளையும் அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

போராட்டம்
ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுக்க அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன் போராட்டம் செய்தனர். டெல்லியில் பல மாநில காங்கிரஸ் தலைவர்கள் களமிறங்கி போராட்டங்களை மேற்கொண்டனர். அமலாக்கத்துறை பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாக கூறி காங்கிரஸ் நிர்வாகிகள் கடுமையான போராட்டங்களை மேற்கொண்டனர். இந்த போராட்டத்தில் பல காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

கட்சி அலுவலகம்
முதல் நாள் போராட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட், சட்டீஸ்கர் முதல்வர் புபேந்திர சிங் பாகல், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ரன்தீப் சிங் சுர்ஜ்வலா, கேசி வேணுகோபால், அதிர் ரஞ்சன் சவுத்திரி, திக்விஜய் சிங், முகுல் வாஸ்னிக், ஜெயராம் ரமேஷ் ஆகியோர் போராட்டத்தின் போது போலீஸ் மூலம் அப்புறப்படுத்தப்பட்டனர். டெல்லியில் காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்திற்கு இடையில் காங்கிரஸ் தலைமையகத்திற்கு உள்ளேயே போலீசார் புகுந்து சில நிர்வாகிகளை கைது செய்து அழைத்து சென்றனர்.

ஜோதிமணி
இந்த போராட்டத்தில் நேற்று டெல்லியில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கைது செய்யப்பட்டார். இதில் தன்னுடைய ஆடை கிழிக்கப்பட்டதாக ஜோதிமணி புகார் வைத்தார். போலீஸ் வாகனத்தில் இருந்து வீடியோ வெளியிட்ட ஜோதிமணி, என்னுடைய ஆடையை கிழித்துவிட்டனர். போலீசார் என்னை மிக மோசமாக தாக்கிவிட்டனர். என்னை வரம்பு மீறி கைது செய்தனர்,

என்ன சொன்னார்?
எங்களுக்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை. தண்ணீர் கேட்டதற்கு தர முடியாது என்று கூறிவிட்டனர். அதோடு இல்லாமல்.. வழியில் தண்ணீர் பாட்டில் வாங்க கூட அனுமதிக்கவில்லை. பெண் எம்பிக்கே இந்த நிலைதான் இந்த நாட்டில் நிலவுகிறது. எனக்கு ஏற்பட்ட நிலை யாருக்கும் ஏற்பட கூடாது என்று ஜோதிமணி கோபமாக குறிப்பிட்டார். டெல்லியில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியின் ஆடை கிழிக்கப்பட்டதாக வைக்கப்பட்ட புகார் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சசி தரூர்
இந்த நிலையில் பல்வேறு காங்கிரஸ் நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள் ஜோதிமணிக்கு ஆதரவாக குதித்துள்ளனர். இது தொடர்பாக சசி தரூர் செய்துள்ள போஸ்டில், இது இந்திய ஜனநாயகத்தில் ஒரு மோசமான செயல். போராடும் ஒரு பெண்ணை இப்படி வரம்பு மீறி நடத்துவது இந்திய நாகரீகத்திற்கு எதிரானது.அதிலும் ஒரு பெண் எம்பிக்கு இப்படி செய்வது என்பது இன்னும் மோசமானது. ஜோதிமணி டெல்லி போலீஸ் மூலம் நடத்தப்பட்ட விதத்தை கண்டிக்கிறேன். சபாநாயகர் ஓம் பிர்லா இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

இன்று சந்திப்பு
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் எம்பிக்கள் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்திக்க உள்ளனர். காங்கிரஸ் எம்பிக்கள் மோசமாக நடத்தப்பட்டதாக கூறி காங்கிரஸ் எம்பிக்கள் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்திக்க உள்ளனர். அதோடு காங்கிரஸ் கட்சி அலுவலகம் உள்ளே புகுந்து தாக்கியது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்க உள்ளனர். நாளை மீண்டும் ராகுல் காந்தி விசாரணை செய்யப்பட உள்ள நிலையில், நாளையும் காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications