ஒரு சின்ன க்ளூ கூட 4 மாசமா கிடைக்கல.. 'மால்வேர்' வைரஸ் வைத்து ஏடிஎம் கொள்ளை.. தட்டி தூக்கிய போலீஸ்!
ஏற்கெனவே தமிழ்நாட்டில் 4 ஏடிஎம்களை உடைத்து ரூ.73 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
டெல்லி: டெல்லியில் ஏடிஎம்மில் மால்வேர் வைரஸ்களை இன்ஸ்டால் செய்து ரூ.5.60 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறியதாவது, "டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம்மில் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், காவலுக்கு என ஆட்கள் யாரும் கிடையாது. இப்படி இருக்கையில், கடந்த செப்டம்பர் 29ம் தேதி இந்த வங்கியில் நூதன முறையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு முதலில் தெரியவில்லை.
சமீபத்தில் கணக்கு வழக்குகளை சரிபார்க்கும்போது ரூ.5.60 லட்சம் பணம் எங்கேயோ இடித்திருக்கிறது. எனவே முதலிலிருந்து மீண்டும் கணக்குகளை சரிபார்த்துள்ளனர். அப்படி இருந்தும் இவ்வளவு பணம் கணக்கில் வரவில்லை. எங்கே போனது எப்படி போனது என்பது குறித்து எதுவுமே தெரியவில்லை. ஏடிம் கார்டுகளை பயன்படுத்திதான் அனைவரும் பணம் எடுத்திருக்கிறார்கள். அதேபோல அவர்கள் குறிப்பிட்ட பணத்தை தவிர கூடுதலாக பணம் எதுவும் ஏடிஎம்மிலிருந்து எடுக்கப்படவில்லை.

மால்வேர் வைரஸ்
இவ்வளவும் சரியாக இருக்கையில் இந்த பணம் எப்படி வெளியே போயிருக்கும் என்று வங்கி அதிகாரிகள் குழம்பியிருக்கிறார்கள். அதன் பின்னர்தான் இந்த சம்பவத்தில் ஒரு க்ளு கிடைத்திருக்கிறது. அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதியன்று டெல்லியின் மயூர் விஹார் பேஸ்-1 பகுதியில் உள்ள ஏடிஎம் சிறிது நேரம் ஆஃப்லைனில் இருந்துள்ளது. வங்கி ஏடிஎம்கள் 24 மணிநேரமும் ஆன்லைனில்தான் இருக்கும். மின்சாரம் துண்டிக்கப்பட்டால் கூட இதெற்கென தனியாக லைன் கனெக்ஷன் இருக்கும். எனவே ஏடிஎம் ஆஃப் லைன் போவதற்கு வாய்ப்பு இல்லை.

புகார்
இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஏடிஎம்மை அதிகாரிகள் முழு சோதனை செய்துள்ளனர். செப்டம்பர் 29 அன்றும் அதற்கு பின்னரும் யார் யார் பணம் எடுத்தார்கள்? எவ்வளவு எடுத்தார்கள்? இதில் லட்சக்கணக்கில் யாரேனும் பணம் எடுத்திருக்கிறார்களா? என்றெல்லாம் சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். எல்லாம் சரியாக இருந்திருக்கிது. ஆனால், ஏடிஎம்மில் வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஒன்று இருந்திருக்கிறது. வங்கியின் சாப்ஃட்வேர் குழுவினர் இது குறித்து சோதனை செய்து பார்த்ததில் ஏடிஎம் மால்வேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் எங்களிடம் புகார் அளித்துள்ளனர்.

இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை
எங்கள் தரப்பில் விசாரணை செய்ததில் நாங்களும் சில விஷயங்களை கண்டுபிடித்தோம். அதாவது ஏடிஎம்மின் லேன் (LAN) கனெக்ஷனை குறிப்பிட்ட நேரம் வரை துண்டித்துவிட்டு மால்வேர் வைரஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. பின்னர் ஒரே அட்டையை பயன்படுத்தி ஒரு மணி நேரத்திற்குள் சுமார் ரூ.5.6 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளையில் ஈடுபட்டது ஒருவரா? அல்லது குழுவா? இவர்களின் நோக்கம் என்ன? என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை. எங்களுக்கு இது தொடர்பாக கடந்த 9ம் தேதிதான் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சலசலப்பு
இருப்பினும் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்" என்று கூறியுள்ளனர். ஏற்கெனவே தமிழ்நாட்டில் 4 ஏடிஎம்களை உடைத்து ரூ.73 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகையில் தற்போது இந்த டெல்லி கொள்ளை சம்பவமும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications