டெல்லியை உலுக்கிய திமுக போராட்டம்.. திருமாவளவன் மட்டும் மிஸ்ஸிங்.. எங்கே போனார்... காரணம் இதுதானாம்!
டெல்லி போராட்டத்தில் திருமாவளவனால் பங்கேற்க முடியவில்லை.
Recommended Video
சென்னை: டெல்லியை ஒரே நாளில் திரும்பி பார்க்க வைத்த திமுக போராட்டத்தில், திருமாவளவன் ஏன் கலந்து கொள்ளவில்லை? என்ன காரணம்? டெல்லிக்கு போகாமல் திடீரென பின்வாங்கிவிட்டார் என்று சொல்லப்படுவது ஏன்?
யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த வாரம் நீக்கி நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டது. எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்தன.. குரல் கொடுத்தன.. கண்டனம் தெரிவித்தன.. ஆனால் யாருமே இறங்கி போராட துணியவில்லை.
அந்த விஷயத்தில் திமுகவை பாராட்ட செய்யலாம். ஆரம்பத்தில் இருந்தே இந்த மசோதாவை எதிர்த்து வந்ததுடன், அதன் தீவிரத்தை வெளிப்படுத்த டெல்லியில் போராட்டம் நடத்தியது. அத்துடன் திமுக கூட்டணி கட்சியினரும் இதில் கலந்து கொள்வார்கள் என்ற அறிவிப்பினையும் செய்தது.

ஆச்சரியம்
திட்டமிட்டபடியே நேற்று இந்த போராட்டம் நடந்தது. திமுகவை போலவே காஷ்மீர் விவகாரத்தை கடுமையாக எதிர்த்த திருமாவளவனும் இதில் கலந்து கொள்ளாதது ஆச்சரியமாக இருந்தது. ஆவேசமாக பேசி, தங்கள் கருத்துக்களை முன் வைத்தும், விசிக ஏன் திடீரென பின் வாங்கியது என்பது புலப்படவில்லை.

காரணம் என்ன?
ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை" என்று தெரிவித்தார். உண்மையிலேயே இதுதான் காரணமாக இருக்க முடியுமா? என்றால் அதுவும் உறுதியாக தெரியவில்லை. ஏனென்றால் திருமாவளவன் டெல்லிக்கு போகாததற்கு வேறு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. நெல்லை மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 27வது பட்டமளிப்பு விழா, கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நேற்று நடைபெற்றது.

பிஎச்டி பட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பிஎச்டி பட்டத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். நெல்லை பல்கலைக்கழக குற்றவியல் மற்றும் குற்ற நீதித்துறையில் ‘மீனாட்சிபுரம் மதமாற்றம்'' தொடர்பாக ஆய்வு செய்து தனது ஆய்வுக் கட்டுரையை திருமாவளவன் ஏற்கனவே சமர்ப்பித்தார். இதற்காகத்தான் அவருக்கு பிஎச்டி பட்டம் வழங்கப்பட்டது.

மாற போவது இல்லை
இந்த விழாவில் பங்கேற்பதற்காகத்தான் திருமாவளவனால் டெல்லி செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், காஷ்மீர் விவகாரத்தில் விசிகவின் கருத்து, ஒருபோதும் மாற போவது இல்லை. அதே போல திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் நிலைப்பாட்டிற்கு எதிராக திருமாவளவன் நடந்து கொள்ள போவதும் இல்லை என்பதுதான் நிஜம்!












Click it and Unblock the Notifications