மைதேயி, குக்கி மக்கள் இனி சேர்ந்து வாழ்வது பெரிய கேள்விக்குறி. மணிப்பூர் சென்ற திருமாவளவன் பேட்டி!
டெல்லி: மெய்தி, குக்கி சமூக மக்கள் நல்லிணக்கத்தோடு இணைந்து வாழ்வதற்கான சூழல் இனி கனியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான் என்று தெரிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி, குக்கி சமூக மக்கள் இடையே வன்முறை வெடித்தது. இந்த நிலையில் இரு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகி மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்களை வன்முறையாளர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர் என்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் அமளிக்கு காரணமானது. மணிப்பூர் கொடூரம் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், மணிப்பூரில் அமைதி திரும்பவும், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் 'இந்தியா' கூட்டணி குழுவினர் 2 நாள் பயணமாக மணிப்பூருக்குச் சென்றனர்.

அங்கு, பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உரையாடினர். இதைத்தொடர்ந்து, மணிப்பூர் சென்ற 'இந்தியா' கூட்டணி எம்.பிக்கள் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று டெல்லி திரும்பினர். மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சிகள் சார்பில் சந்தித்தது குறித்து டெல்லியில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய திருமாவளவன், "தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என மணிப்பூர் மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். தங்கள் வேதனைகளை கூறினார்கள். இந்த விவகாரத்தில் இரு தரப்பு மக்களும், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
முகாம்களில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லை, நல்ல உணவு இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர். குக்கி சமூக மக்கள் மைதேயி சமூக மக்களோடு சேர்ந்து இனிமேல் தங்களால் வாழ இயலாது, ஏனெனில் மீண்டும் சொந்த இடங்களுக்கு சென்று தங்குவதற்கு பாதுகாப்பு இல்லை என்ற வருத்ததை பதிவு செய்தனர்.
அதேபோல் மைதேயி சமூக மக்கள் துச்சத்பூர் மாவட்டத்திலிருந்து வெளியேறிவிட்டோம். மீண்டும் அங்கு சென்று வாழ்வதற்கான வாய்ப்பு மிகவும் அரிது என்று தெரிவித்தனர். மணிப்பூர் ஆளுநரை சந்தித்தோம். மீண்டும் மணிப்பூரில் சுமூகமான வாழ்க்கை அமைய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும், "மணிப்பூர் சென்றபோது, ஒரு மாநிலத்திற்குள் உள்ள 2 நாடுகளுக்கு சென்று வந்த உணர்வு இருந்தது. மைதேயி, குக்கி சமூக மக்கள் நல்லிணக்கத்தோடு இணைந்து வாழ்வதற்கான சூழல் கனியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்" என்று தெரிவித்துள்ளார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications