பிரதமர் கூறியபடி... நானும் ஒரு அந்தோலன் ஜீவிதான்... மக்களவையில் திருமாவளவன் பேச்சு!
டெல்லி: போராடும் விவசாயிகளை பிரதமர் அந்தோலன் ஜீவி என்கிறார். அவரது கூற்றுப்படி நானும் ஒரு அந்தோலன் ஜீவிதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மக்களவையில் பேசினார்.
இந்த அரசு மக்களுக்கான அரசாக இல்லை. கார்ப்பரேட்களுக்கான அரசாக இருக்கிறது என்றும் தொல்.திருமாவளவன் கூறினார்.
விவசாயிகளை வாட்டி வதைக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் .திருமாவளவன் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி உரை
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து நேற்று முன்தினம் மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் டெல்லியின் எல்லையில் போராடி வரும் விவசாயிகளை மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திப் பேசியதோடு, இது போன்ற விவசாய சீரமைப்புகளைக் கொண்டு வர முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தான் முன்னோடி என்று மேற்கோள் காட்டி பேசியுள்ளார். மேலும் போராடும் விவசாயிகளை அந்தோலன் ஜீவி என்று கூறினார்
சர்ச்சை வார்த்தைக்கு கண்டனம்
இந்த வார்த்தையின் ஒற்றை வரி அர்த்தம் 'தொழில்முறை போராட்டக்காரர்கள்', அதாவது போராட்டத்தையே தொழிலாக வைத்திருப்பவர்கள் என்று பொருள். ஆனால் இதற்கு நீண்ட நெடிய விளக்கத்தையும் பிரதமரே அளித்தார். இந்த நிலையில் பிரதமர் பயன்படுத்திய இந்த வார்த்தைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திருமாவளவன் பேச்சு
இந்த நிலையில் இன்று மக்களவையில் குடியரசு தலைவரின் உரை குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பியுமான தொல்.திருமாவளவன் கூறியதாவது:- குடியரசுத்தலைவரின் உரை உழைக்கும் மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது. இந்த அரசு மக்களுக்கான அரசாக இல்லை. கார்ப்பரேட்களுக்கான அரசாக இருக்கிறது. விவசாய மக்களின் போராட்டம் இரண்டரை மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறது.
நானும் அந்தோலன் ஜீவிதான்
போராடும் விவசாயிகளை பிரதமர் அந்தோலன் ஜீவி என்கிறார். அவரது கூற்றுப்படி நானும் ஒரு அந்தோலன் ஜீவிதான். போராடும் மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக பிரதமர் பேசிய பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்" எனத் தெரிவித்தார்.