இது தான் காஷ்மீர் மக்களின் உண்மையான முகம்.. சுற்றுலா பயணிகளை காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்த காட்சி
டெல்லி: நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, மனிதநேயம் இன்னும் சத்தமாக பேசியது. காயமடைந்த சுற்றுலாப் பையனை மீட்க தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார் ஒரு காஷ்மீரி - இதுதான் உண்மையான காஷ்மீர். காஷ்மீர் வன்முறையானவர்களால் வரையறுக்கப்படவில்லை.. அதேநேரம் இரக்கம், தைரியம் மற்றும் அன்பு ஆகியவற்றால் காஷ்மீர் இருக்கிறது. நாம் உண்மையில் யார் என்பதை உலகம் பார்க்கட்டும்,, இதுதான் இந்தியாவின் சகோதரத்துவம் என்று கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் மினி சுவிட்சர்லாந்து என போற்றப்படுகிறது. இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஊரில் பரந்த புல்வெளிகளை கொண்ட அழகிய இடம் ஒன்று உள்ளது. இந்த பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கால்நடையாகவும், குதிரைகளில் சவாரி செய்தும் செல்ல முடியும்.இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தும் காஷ்மீர் வரும் சுற்றுலா பயணிகள் விரும்பி வரும் பகுதிதான் பஹல்காம்.

இங்கு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் அதிவேகமாக களம் இறங்கினார்கள். அப்போது திடீரென அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்கி உள்ளனர்.
தாக்குதல் நடந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் வருவதற்குள் அவர்கள் ஓடிவிட்டார்கள். இதனிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுண்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். மீட்பு பணிகள் நடந்தது. இந்த தாக்குதலில் 27 சுற்றுலா பயணிகள் இறந்தனர். பல சுற்றுலா பயணிகள் காயம் அடைந்தனர்.
பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய போது, உள்ளூர் காஷ்மீர் மக்கள் உயிரை பணயம் வைத்து சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கி சூட்டை தொடர்ந்து பஹல்காமில் உள்ள பல குதிரையேற்ற வீரர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் ஓடி வந்து உதவி செய்துள்ளனர். அவர்களால் முடிந்த வரை பலரை காப்பாற்றி உள்ளனர்.
இதுபற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். "தீவிரவாத தாக்குதலின் போது இங்குள்ள முஸ்லிம்களே எங்களை பாதுகாத்தனர். எங்களுடைய டிரைவர்(முஸ்லிம்) "எங்கள் உயிர்களை கொடுத்தாவது உங்களை பாதுகாப்போம்" என்று சொன்னார் என்று பேசிய வீடியோ தற்போது பரவி வருகிறது. இதேபோல் காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவரை தனது தோளில் சுமந்தபடி காஷ்மீரி ஒருவர் காப்பாற்றினார்.
இதை பகிர்ந்த நெட்டிசன், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, மனிதநேயம் இன்னும் சத்தமாக பேசியது. காயமடைந்த சுற்றுலாப் பயணியை மீட்க தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார் ஒரு காஷ்மீரி - இதுதான் உண்மையான காஷ்மீர். காஷ்மீர் வன்முறையாளர்களால் வரையறுக்கப்படவில்லை.. அதேநேரம் இரக்கம், தைரியம் மற்றும் அன்பு ஆகியவற்றால் காஷ்மீர் இருக்கிறது. நாம் உண்மையில் யார் என்பதை உலகம் பார்க்கட்டும். இதுதான் இந்தியாவின் சகோதரத்துவம் என்று கூறியுள்ளார். அதேநேரம் சிலர் காஷ்மீர் குறித்தும், முஸ்லிம் மக்கள் குறித்து வெறுப்புகளை பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தான் காஷ்மீரின் நடந்த மனித நேய சம்பவங்களை பலர் பகிர்ந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications