நிர்மலா சீதாராமனுடன், திருமாவளவன் சந்திப்பு.. 12 கோரிக்கைகளுடன் பட்டியல் கொடுத்தாச்சு
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத் திட்டங்கள் தொடர்பாகவும் , போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட எஸ் சி / எஸ்டி மக்களுக்கான திட்டங்கள் தொடர்பாகவும் 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் (தனி) தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன்.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: என்னை போலவே ரவிக்குமாரும், விழுப்புரம் தொகுதி தொடர்பாகவும், தமிழகத் திட்டங்கள் தொடர்பாகவும் தனியே கோரிக்கை மனுவை அளித்தார். நிச்சயம் உதவுவதாக நிதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் வலியுறுத்திய கோரிக்கைகள்:

1. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போது வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக உள்ளது. இதை சரி செய்வதற்கு சிறப்பு திட்டம் தேவை. தொழிற்துறையில் அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தையும் அதற்கான
உதவித்தொகையையும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டுகிறேன்.
2.விவசாயிகள் துயரத்தில் தவிக்கின்றனர்.பல விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
3.வருமான வரி வரம்பை ரூபாய் பத்து லட்சமாக உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
4.குறிப்பிட்ட காலத்திற்குள் குடிசை வீடுகளை நிரந்தர வீடுகளாக மாற்றும் பெரும் திட்டத்தை இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.
5.தலித் மாணவர் மற்றும் மாணவிகளுக்கான சிறப்பு பள்ளிகளை நாடு முழுவதும் தொடங்குவதற்கு 2008 ஆம் ஆண்டு திரு.பிரணாப் முகர்ஜி அவர்களின் தலைமையிலான அமைச்சர்கள் குழு பரிந்துரைத்தது. ஆனால் முந்தைய அரசுகள் அதை செயல்படுத்தவில்லை. அந்த திட்டத்துக்கான அறிவிப்பை இந்த முதல் பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம்.
6. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பாபாசாஹேப் அம்பேத்கர் வேண்டுகோளுக்கிணங்க 'Post Matric Scholarship' திட்டம் தொடங்கப்பட்டது.
எவ்வளவு எண்ணிக்கையில் தலித் மாணவ மாணவியர் பயின்றாலும் அவர்களுக்கு தேவையான உதவித்தொகையை வழங்கும் திறந்த நிலைத்திட்டம் இது. ஆனால் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் 11000 கோடி ரூபாய் அளவிற்கு நிலுவைத் தொகை உள்ளது. இது தலித் மாணவர்களுக்கு சாதகமற்ற ஒரு சூழ்நிலையை உருவாகியுள்ளது. உதவித்தொகை மறுக்கப்பட்ட பல தலித் மாணவர்கள் தங்களது படிப்பை இடையில் நிறுத்தியுள்ளனர். 'Post Matric ScholarShip' திட்டத்துக்கு போதிய நிதியை ஒதுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
7.2018 - 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 'SCSP' (Scheduled Caste Sub Plan) திட்டத்திற்கு 1,11,780.33 கோடி ரூபாயும் 'TSP' திட்டத்திற்கு
48,108.04 கோடி ரூபாயும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தலித் மற்றும் பழங்குடியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப நிதியை இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
8. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
9. 'Smart City' திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்.
10. தமிழ்நாடு ஒரு தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலம். மேற்பரப்பு நீர் ஆதாரம் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரம் குறைவாக உள்ள மாநிலம்.
கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் தான் உடனடி தீர்வாகும். விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும்
ராமநாதபுரம் மாவட்டங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளை தொடங்க தேவையான நிதியை ஒதுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
11. வறட்சி, பேரிடர்களை சந்திப்பதற்கு போதிய நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்.
12.நம் நாட்டில் உள்ள நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு உதவ 'அனைவருக்கும் அடிப்படை வருமானம் வழங்கும் திட்டம்' போன்றதொரு திட்டத்தை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications