டிரைலரே இப்படி.. குடியரசு தின போராட்டம் எப்படி இருக்கும்.. மலைக்க வைத்த விவசாயிகளின் டிராக்டர் பேரணி
டெல்லி: ஆயிரக் கணக்கான டிராக்டர்களுடன் அணி வகுத்து மத்திய அரசுக்கு தங்கள் கோரிக்கையை ஆழமாக பதிவு செய்துள்ளனர் விவசாயிகள்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 44-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு அவர்களுடன் இன்று நடத்திய 8வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில்தான், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் நாளில் டெல்லியை நோக்கி மிகப்பெரிய டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கு ஒத்திகை எடுப்பது போல நேற்று பேரணி நடத்தினர். ஆனால் அதுவுவே பெரும் பிரமாண்டமாக இருந்தது.
டிராக்டர் பேரணி சிங்கு, திக்ரி, ஷாஜகான்பூர், பல்வால் மற்றும் காசிப்பூர் வழியாக சென்றது. தஸ்னா, அலிகார் சாலை வரை சென்று பின்னர் காசிப்பூர் திரும்பியது.
3,500 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மற்றும் தள்ளுவண்டிகளுடன் இந்த அணிவகுப்பில் விவசாயிகள் பங்கேற்றதாக பாரதி கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்) தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹான் தெரிவித்தார்.
சம்ப்லா டோலில் இருந்து அணிவகுப்புக்கு, நாங்கள் கொடியசைத்தபோது சுமார் 300 டிராக்டர்கள் இருந்தன. ஆனால் பிறகு பல ஆயிரம் டிராக்டர்கள் பங்கேற்றன என்கிறார் அவர்.
மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு இது ஒரு தெளிவான எச்சரிக்கையாகும், இது மூன்று சட்டங்கள் மற்றும் வரைவு மின்சார மசோதா திரும்பப் பெறப்படாவிட்டால், போராட்டம் தொடரும். இது ஒரு ஒத்திகை மட்டுமே, குடியரசு தினத்தில் நடக்கப்போவதை ஒப்பிடுகையில் இது சாதாரணம். டெல்லியில் மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலத்திலும், நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதேபோன்ற டிராக்டர் அணிவகுப்புகளுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம், என்று அவர் மேலும் கூறினார்.
இந்த டிராக்டர் அணி வகுப்பு ட்ரோன் கேமரா மூலம் காட்சியாக்கப்பட்டுள்ளது. அதை பார்க்க பெரும் பிரமாண்டமாக தெரிகிறது. எனவே குடியரசு தின விழா நாளில் நடக்கப்போகும் டிராக்டர் பேரணி இதை விட பல மடங்கு பெரிதாக இருக்கப்போவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications