வயநாடு நிலச்சரிவு: பொய் சொல்லிவிட்டார்.. அமித்ஷாவுக்கு எதிராக இடதுசாரிகள் உரிமை மீறல் நோட்டீஸ்!
டெல்லி: நாடாளுமன்றத்தில் வயநாடு நிலச்சரிவு தொடர்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரளா மாநில அரசுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்ததாக இடதுசாரி எம்பிக்கள் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளனர். இதே விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியும் அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் ஏற்கனவே கொடுத்துள்ளது.
வயநாடு நிலச்சரிவு நிலைகுறித்த விவாதம் நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தப் பேரிடர் ஏற்படுவதற்கு 7 நாட்கள் முன்னதாக ஜூலை 23 அன்று கேரள அரசுக்கு மத்திய அரசு முன்னெச்சரிக்கை செய்ததாகவும், இதன் பின் ஜூலை 24, 25 ஆகிய தேதிகளிலும் முன்னெச்சரிக்கை செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமாக கனமழை பெய்யக்கூடும் என்றும், இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஜூலை 26 அன்று கேரள அரசுக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். முன்னெச்சரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என தெரிவித்திருந்தார்.

மேலும் பேரிடரை எதிர்பார்த்து ஜூலை 23 அன்று மத்திய அரசு தேசிய பேரிடர் மீட்புப்படையின் குழுக்களை கேரளாவுக்கு விமானத்தில் அனுப்பிவைத்ததாக அமித்ஷா ஷா கூறினார். பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வாழ்ந்த மக்களை வேறு இடத்திற்கு மாற்ற கேரள அரசு, தவறியது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். உரிய நேரத்தில் கேரள அரசு செயல்பட்டிருந்தால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் எனவும் அம்த்ஷா பேசியிருந்தார்.
இதனை கேரளா முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக மறுத்திருந்தார். அத்துடன் அமித்ஷாவின் இந்த பேச்சு உண்மைக்குப் புறம்பானது; நாடாளுமன்றத்தில் அமித்ஷா பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார் என ராஜ்யசபாவில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ், சபை உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.
தற்போது காங்கிரஸைத் தொடர்ந்து இடதுசாரி எம்பிக்களும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அதில், கேரளாவுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாக கூறி ராஜ்யசபாவை அமித்ஷா தவறாக வழிநடத்தி இருக்கிறார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது சபையை அவமதிக்கக் கூடிய செயல் என்பதால் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த சிபிஎம் எம்பிக்களான ஜான் பிரிட்டாஸ், ஏஏ ரஹீம், சிவதாசன் ஆகியோர் ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கருக்கு எழுதிய கடிதத்தில் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications