டிக்கா உத்சவ் தடுப்பூசி திருவிழா.. ஒரே நாளில் 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி..அரசு திட்டம் என்ன
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தும் விதமாக இன்று இரண்டாவது நாளாக டிக்கா உத்சவ் எனப்படும் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது.
இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலும் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவை நடத்த அனைத்து மாநில அரசுகளையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இந்தத் தடுப்பூசி திருவிழாவில் 45 வயதைக் கடந்த அதிகபட்ச நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடைபெற்றது.
டிக்கா உத்சவ் எனப்படும் இந்தத் தடுப்பூசி திருவிழாவில் முதல் நாளான நேற்று மட்டும் நாட்டில் புதிதாக 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் 16 லட்சம் பேருக்கு மட்டும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த நிலையில், அதைவிட அதிகமாகவே நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் நாட்டில் 6.38 லட்சம் தடுப்பூசி மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி மையங்கள் இரண்டு மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி திருவிழாவில் பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வழக்கத்தைவிட அதிகப்படியான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை நிலவுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மத்திய அரசு உடனடியாக தடுப்பூசி வழங்கி உதவ வேண்டும் என்றும் அம்மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications