நேரம் வந்துருச்சு! உயர்நீதிமன்றத்தில் மாநில மொழி - மோடி முன் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா
டெல்லி: உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் சட்ட நடைமுறைகளை மேற்கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
விஞ்ஞான் பவனில் மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அத்துமீறும் போலீசார்கள்.. புகார்களை விசாரிக்க தனிக்குழு: சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
இந்த நிகழ்வில் பேசிய என்.வி.ரமணா, "அரசியலமைப்பு நீதிமன்றங்களில் சட்டங்களை ஒருவரின் நுண்ணறிவு மற்றும் சட்டம் குறித்த புரிதலின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டுமே தவிர மொழி புலமையை மட்டுமே அவை அடிப்படையாக கொண்டிருக்கக் கூடாது. நீதித்துறை உள்ளிட்ட அனைத்து ஜனநாயக அமைப்புகளும் நாட்டின் சமூகம் மற்றும் புவியியல் பன்முகத்தனையை கண்ணாடி போன்று பிரதிபலிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
மாநில மொழிகள்
மாநில உயர்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள், சட்டம் குறித்த நகர்வுகள் அனைத்தும் அந்தந்த மாநில மக்களின் தாய் மொழியில் இருக்க வேண்டும் என்று எனக்கு ஏராளமான மனுக்கள் வருகின்றன. இந்த கோரிக்கையை மறுபரிசீலனை செய்து தர்க்கரீதியாக ஒரு முடிவுக்கு வருவதற்காக நேரம் வந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். நம் இந்தியாவில் நீதிக்கு அணுகுவது என்ற கருத்து, நீதிமன்றங்களில் வெறும் வழக்கறிஞர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை விட விரிவான ஒன்று. உலகிலேயே இந்தியாவில்தான் சிறப்பான சட்ட உதவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்தியமயமாக்க வேண்டும்
நான் நீதி வழங்கும் முறையை இந்தியமயமாக்க வேண்டும் என்பதை வலுவாக ஆதரிக்கிறேன். மக்களின் உணர்வுகள், தேவைகளை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு சட்ட அமைப்பை வடிவமைக்க வேண்டும். அதன் மூலம், நீதித்துறையை எளிதாக அணுக முடியும். இதுதான் நான் சொன்ன இந்தியமயமாக்கல். நடைமுறை சீர்திருத்தம், காலிப்பணியிடங்களை நிரப்புவது என பல அம்சங்களை இது உள்ளடக்கியது.
அரசு அதிகாரிகளின் கடமை
நில அளவு, ரேஷன் கார்டு தொடர்பாக தன்னிடம் வரும் விவசாயிகளின் பிரச்சனைகளை ஒரு தாசில்தார் தீர்த்தால் அவர் நீதிமன்றத்தை அணுக மாட்டார். நகராட்சி அல்லது கிராம பஞ்சாயத்து தனது கடமையையை முறையாக செய்தால் அங்குள்ள மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமே ஏற்படாது. வருவாய்த்துறை அதிகாரிகள் நிலத்தை சட்டப்படி கையகப்படுத்தினால் நிலத்தகராறு வழக்குகள் வந்திருக்காது.
லட்சுமண ரேகை
நமது அரசமைப்பு சட்டம் என்பது மூன்று அமைப்புகளுக்கு அதிகாரத்தை பிரித்து வழங்கியுள்ளது. அவற்றுக்கு இடையே இருக்கும் இணக்கமான செயல்பாடுகள்தான் ஜனநாயகத்தை வலுப்படுத்துபவை. இதில் நமது கடமையை செய்கையில் லட்சுமண ரேகையை கவனத்தில் கொள்ள வேண்டும். சட்டப்படி செயல்பட்டால் அரசின் நடவடிக்கைகளில் நீதித்துறை குறுக்கிடாது. நீதிமன்ற உத்தரவுகளை பல ஆண்டுகளாக அரசுகள் செயல்படுத்தாமல் இருக்கின்றன. அவமதிப்பு வழக்குகளே பெரும் சுமையாக உள்ளன.
விவாதிமின்றி நிறைவேற்றப்படும் சட்டங்கள்
இந்தியாவில் சில சட்டங்கள் போதிய விவாதங்கள் நடத்தப்படாமல் நிறைவேற்றப்படுகின்றன. மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் தெளிவில்லாத சட்டங்கள் சட்ட சிக்கலுக்கு கூடுதல் சுமையாக மாறிவிடுகிறது. தொலைக்கு நோக்கு பார்வை, சிந்தனை தெளிவு, மக்கள் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரப்படுவது குறையும்." என்றார்.