திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு? ரிப்போர்ட் கேட்கும் மத்திய அரசு! பரபரப்பு
டெல்லி: புகழ்பெற்ற திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து விரிவான அறிக்கையை அளிக்குமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா கேட்டுள்ளார்.
உலக புகழ்பெற்ற திருப்பதி கோயிலுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். ஒவ்வொரு ஆண்டும் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

புகார்: இதற்கிடையே திருப்பதி கோயிலில் கடந்த சில ஆண்டுகளாகத் திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குஜராத்தில் ஆய்வகத்தின் ரிப்போர்ட்டை மேற்கொள் காட்டி இந்தக் குற்றச்சாட்டுகளை சந்திரபாபு நாயுடு அரசு வைத்தது. ஜெகன் அரசில் லட்டு செய்யப் பயன்படுத்தப்பட்ட நெய்யின் மாதிரிகளில் மாட்டு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருந்ததாகப் புகார் எழுந்தது.
இது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி கோயிலையும் சனாதன தர்மத்தையும் இழிவுபடுத்திவிட்டதாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திர துணை முதல்வர் ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் சாடியுள்ளனர். இதில் இப்போது மத்திய அரசும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
சந்திரபாபு நாயுடு: இந்த விவகாரம் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் என் சந்திரபாபு நாயுடுவிடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா தொலைப்பேசி வழியாகப் பேசியுள்ளார். திருப்பதி லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்ட தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளார்..
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜேபி நட்டா, "ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் இது குறித்துப் பேசினேன். இது குறித்து ரிப்போர்ட் கேட்டுள்ளேன். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு லட்டுக்கள் தயாரிக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வோம். தவறு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
சுகாதாரத் துறை அமைச்சகம்: சுகாதார அமைச்சகம் மட்டுமின்றி மத்திய உணவு துறையும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஆந்திர முதலமைச்சர் சொல்லி இருப்பது கவலைக்குரிய விஷயம். விரிவான விசாரணை தேவை. தவறு உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
குஜராத்தில் உள்ள ஆய்வகம் நெய் மாதிரிகளை ஆய்வு செய்து ரிப்போர்ட் அளித்திருந்தது. அதில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி கோவிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்புகள் மற்றும் மீன் எண்ணெய் இருப்பதை உறுதி செய்தது. இந்த டெஸ்ட் ரிப்போர்ட்டின் நகலை வெளியிட்ட தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனம் வெங்கட ரமண ரெட்டி ஜெகன் மோகன் ரெட்டி அரசை மிகக் கடுமையாகச் சாடினார்.
அதேநேரம் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் இந்தத் தகவலைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சந்திரபாபு நாயுடு கடவுளை வைத்து அரசியல் செய்வதாக ஜெகன்மோகன் ரெட்டி விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications