இரு ஈகோக்களின் மோதல்.. கொதிகலனாக மாறிய டெல்லி.. என்னதான் தீர்வு இதற்கு!
வழக்கறிஞர்கள் - போலீசாரின் மோதல் போக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
Recommended Video
டெல்லி: எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று போலீசார்களே இப்படி பகிரங்கமாக நாட்டின் தலைநகரில் இருந்து கோரிக்கையை எழுப்பும் சூழல் நிகழுமா என்பதை கண்டு நாட்டு மக்கள் உறைந்துள்ளனர். போலீசாரே, இப்படி போராட்டம் நடத்துவது என்பது நாட்டில் நடக்காத விஷயம்.. இது உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியிலேயே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் தீஸ் ஹஸாரி கோர்ட்டில் வக்கீல்கள், போலீசார் மோதிக் கொண்டனர். இதில் காயமுற்ற வக்கீலுக்கு நிவாரண நிதி வழங்கி சமரசம் செய்யப்பட்டது. ஆனால், போலீசாரை கண்டித்து வக்கீல்கள் தொடர்ந்து கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டத்தின்போதுதான் போலீஸ்காரர் ஒருவரை வக்கீல்கள் சேர்ந்து சரமாரியாக அடித்த வீடியோ வெளியாகி வைரலானது.
இந்த விவகாரத்தில் போலீசார் கடும் கோபமும் அதிருப்தியும் அடைந்தனர். இதையடுத்து இன்று சீருடையை கழற்றி வைத்து விட்டு போராட்டக் களத்தில் குதித்து விட்டனர்.

வரலாறு
போலீஸார் - வக்கீல்கள் மோதல் என்பது இன்று முளைத்த விவகாரம் இல்லை.. இவர்கள் இருவருக்கும் இடையேயேன மோதல் என்பது நாடு முழுவதும் நீண்டகாலமாக நடந்து வருவம் விஷயம்தான்... தமிழகத்திலும் இப்படி ஒரு பெரும் மோதல் நடந்த வரலாறு உண்டு. 2009-ல் சென்னை ஐகோர்ட்டில் நடந்த அந்த விவகாரம் ஒரு ஆறாத வடுவாகவே தமிழகத்தில் உள்ளது. இவர்கள் மோதிக் கொண்ட துயரத்தை லைவ் ஆகவே டிவியில் பார்க்க வேண்டிய நிலையும் நமக்கு ஏற்பட்டது.

ஒற்றுமை?
வக்கீலும், போலீசும் எதற்காக மோதல் போக்கை கையாள வேண்டும்? இருவருமே நீதியையும் சட்டத்தையும் நிலைநாட்டும் இடத்தில் இருப்பவர்கள்.. அப்படி என்றால் இவர்களுக்குள் ஒற்றுமைதானே திளைக்க வேண்டும்? ஏன் எதிரிகள் போல பாவித்து கொள்ள வேண்டும் என்ற சந்தேகமும் எழுந்தே வருகிறது.

ஈகோ சமாச்சாரம்
எந்த கேஸ் விவகாரமாக இருந்தாலும் நாங்கள்தானே குற்றவாளிகளை கைது செய்கிறோம் என்று போலீஸ் தரப்பில் மார் தட்டி கொள்கின்றனர். கைது செய்வது வரைக்கும்தான் நீங்க.. அதுக்கப்பறம் கோர்ட்டில் முடிவு செய்வது நாங்கள்தான் என்பது வழக்கறிஞர்களின் ஸ்திரமான நம்பிக்கை. இப்படி பலம் வாய்ந்தவர்கள் யார், துறை ரீதியான சக்தி படைத்தவர்கள் யார், என்ற பல்வேறு "ஈகோ" சமாச்சாரங்கள்கூட இரு தரப்பிலுமே இருப்பதாக பொதுவாக பார்க்கப்படுகிறது.

நீதிமன்ற மதிப்பு
ஆனால், இன்று டெல்லியில் நடப்பதை பார்க்கும்போது, போலீசாரை வக்கீல்கள் தாக்கினது மிகப்பெரிய தவறாகவே தெரிகிறது. போராட்டம் என்பது அவரவர் தார்மீக உரிமை.. அப்படி பார்த்தால் வக்கீல்களும் நீதிமன்ற புறக்கணிப்பு நடத்துவது என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் மற்றவர்கள் போராட்டம் செய்வதற்கும், வக்கீல்கள் போராட்டம் செய்வதற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. வக்கீல்கள் போராட்டம் செய்தால், நீதிமன்ற மதிப்பை மக்களிடம் வெகுவாக குறைத்து விடும்.

அவலத்தின் உச்சம்
வக்கீல்களே வன்முறையில் ஈடுபடுவதும், போலீசாரே பாதுகாப்பு வேண்டும் என்று கேட்பதும் அவலத்தின் உச்சமாக உள்ளது. பைக்கில் போய் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரரை வக்கீலே சரமாரி தாக்குவது அதிர்ச்சியையும் தந்துள்ளது. இதே வக்கீல் நாளை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றால், மக்களின் நிலை என்னாகும் என தெரியவில்லை. ஆனால் இரு தரப்பு மோதலும் ஒரு களங்கமாக ஆளும் அரசுக்கு போய்விடக்கூடாது என்பதே அனைவரின் கவலையாகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications