என்னையும் விசாரித்தே தீர்ப்பளிக்க வேண்டும்... சுப்ரீம் கோர்ட்டில் சபாநாயகர் தனபால் கேவியட் மனு!
Recommended Video

டெல்லி : தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தன்னையும் விசாரித்தே இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்று சபாநாயகர் கேவியட் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்க மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் சபாநாயகர் தனபால் அளித்த தகுதி நீக்கம் செல்லும் என்றும் அறிவித்தார். மேலும் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த இருந்த தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார். இடைத்தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயார் என்று அறிவித்து வரும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டிடிவி தினகரன் தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேருடன் மதுரையில் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையின் முடிவில் தகுதி நீக்கப்பட்ட 18 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முன்வந்தால் தம்மையும் விசாரித்து தீர்ப்பை வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications