ஆளுநரிடம் கெஞ்சிக்கிட்டு இருக்கோம்.. "கிடப்பில் 3 முக்கிய கோப்புகள்”! உச்சநீதிமன்றத்தில் அரசு வாதம்
டெல்லி: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்கள் என்ன என்று விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்யும் தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகளை சட்டவிரோதமாக அறிவிக்கக்கோரி தமிழ்நாடு அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். "டிஎன்பிஎஸ்சி பணி நியமனங்கள், சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான ஒப்புதல்கோரும் கோப்பு, ஊழல் வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் கோப்புகளை கூட ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளார்." என்று தெரிவித்தனர்.
வழக்கறிஞர் வில்சன், "ஆளுநர் ரவி மக்களின் பொது சுகாதார திட்டம் தொடங்கி உயர் கல்வி விவகாரம் வரை எந்த விதமான கோப்புகள் மற்றும் மசோதாக்களுக்கு பதில் அளிக்கவில்லை. ஆளுநர் ஆர்.என்.ரவியால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 14 இடங்களில் தலைவர் உள்ளிட்ட 10 பதவிகள் காலியாக இருக்கின்றன. பல முறை கோரிக்கை விடுத்த பிறகு ஆளுநர் அந்த கோப்பை கிடப்பில் போட்டு இருக்கிறார்" என்று கவலை தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவிக்கையில், "2020 ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி இப்போது வரை, அரசு நிறைவேற்றிய மசோதாக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என நாங்கள் ஆளுநரிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறோம். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக சில கோப்புகளில் கையெழுத்திட வேண்டியும் வலியுறுத்தி வருகிறோம். நன்னடத்தையின் அடிப்படையில் கைதிகளின் தண்டனையை குறைக்க பரிந்துரைக்க வேண்டி வருகிறோம். ஆனால், ஆளுநர் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications