பேரறிவாளன் கேஸ் போலவே.. ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முக்கியமான பாயிண்டை வைத்த தமிழக அரசு!
டெல்லி: ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்துள்ளது. அரசியல் சாசன பிரிவு 142-ன் படி உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் மார்ச் மாத தொடக்கத்தில் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட தமிழக அரசின் 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

ஆளுநர் வழக்கு - காரசார வாதம்
அப்போது தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் என இருத ரப்பிலும் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து, தீர்ப்பை ஒத்திவைத்து கடந்த 10ஆம் தேதி உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட் அமர்வு. மேலும் தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் தரப்பு தங்களது எழுத்து மூலமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
ஆளுநர் தரப்பு எழுத்துப்பூர்வ பதில்
அதன்படி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் ரவி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வாதத்தில், "அரசியல் சாசனத்தின் கீழ் ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 200- ல் குறிப்பிடப்பட்டுள்ள discretion என்ற வார்த்தை ஆளுநருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தை குறிக்கிறது.
எனவே ஆளுநர் ஒவ்வொரு முறையும் மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் படி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் அடிப்படையில், ஒரு மசோதா மீதான ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டால் அந்த மசோதா செயலிழந்து விட்டது என்று அர்த்தம். எனவே காலாவதியான மசோதாவை மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பும்போது, அதன் மீது ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அவ்வாறு மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க முழு அதிகாரமும் ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின் கீழ் வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் மசோதாக்கள் ஒப்புதல் வழங்க வேண்டும் என பஞ்சாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பொருந்தாது.
தேவைப்பட்டால் ஆளுநருக்கு எதிரான இந்த வழக்குகளை நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து விசாரிக்கலாம். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் கிடையாது. ஆனால் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரை நீக்குவது என்பது அவருடைய அதிகாரத்தை பறிக்கும் செயல்" என்று ஆளுநர் தரப்பு தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வ வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வாதங்கள் தாக்கல்
அதேசமயம், உச்சநீதிமன்றம் எழுப்பிய 12 கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி மற்றும் பி. வில்சன் ஆகியோர் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக அரசின் எழுத்துப்பூர்வ வாதத்தில், "அரசியல் சாசனப் பிரிவு 200ன் படி மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும் என்று விரிவான அரசியல் சாசன அதிகாரங்கள் விளக்கப்பட்டுள்ளது. அதாவது மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் கட்டாயம் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என அரசியல் சாசனத்தின் பிரிவு 200 கூறுகிறது.
சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்
அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டே ஆளுநர் முடிவுகளை எடுக்க வேண்டும். ஆளுநருக்கு உரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆளுநர் எந்தவொரு தனிப்பட்ட முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாது. பேரறிவாளன் வழக்கில் ஆளுநரின் செயலற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிட்டதைப் போன்று இந்த வழக்கிலும் தீர்ப்பளிக்க வேண்டும்.
அரசியல் சாசன பிரிவு 142-ன் படி உச்சநீதிமன்றத்துக்கு உள்ள தனி அதிகாரத்தை பயன்படுத்தி, அரசியல் சாசனப்படி ஆளுநர் செயல்படாத காரணத்தால், குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பிய மசோதாக்கள், பல்கலைக்கழக மசோதாக்கள் உள்பட 10 மசோதாக்களையும் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றதாகக் கருதுவதாக உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும்" என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications