அமலாக்கத்துறை சமர்ப்பித்த முக்கிய தகவல்.. செந்தில் பாலாஜி மனு தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
டெல்லி: செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என்றும் இன்று இறுதி நாள் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர். அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அடங்கிய குறிப்பு சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வழக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வேறு ஒரு வழக்கில் ஆஜராகியிருந்ததால், செந்தில் பாலாஜி வழக்கில் அவர் ஆஜராகவில்லை.
இதனையடுத்து நீதிபதி ஓகா, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துவிட்டோம். ஆனால், வழக்கில் சில விளக்கங்கள் எங்களுக்கு தேவைப்படுகிறது. போக்குவரத்து துறையில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த 3 வழக்குகளையும் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரிக்கப்போகிறதா? அல்லது 1000-க்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டப்பட்ட வழக்கை தவிர்த்துவிட்டு செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கை மட்டும் விசாரிக்கப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கறிஞர் சோகிப் ஹூசைன் ஆகியோர் வேறு நீதிமன்றத்தில் இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து நீதிபதி ஓகா இந்த வழக்கை சற்று நேரம் ஒத்திவைத்தார்.
பின்னர் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஆஜராகி, நீதிபதி எழுப்பிய கேள்விக்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகஸ்ட் 20-ஆம் தேதி விளக்கம் அளிப்பார் என்று தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் ஆஜராக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வரத் தாமதமாகும் எனக்கூறி வழக்கை இன்றைய நாள் இறுதியில் தள்ளிவைக்கக் கோரி அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது. இன்று இறுதி நாள் என திட்டவட்டமாக கூறியுள்ளனர். மேலும், சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கையை ஏற்று இன்று கடைசி வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதி ஓகா தெரிவித்தார்.
அதன்படி, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.விசாரணை தொடங்கிய நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான 3 வழக்குகளையும் அமலாக்கத்துறை விசாரிக்குமா அல்லது பணப் பரிவர்த்தனை வழக்கை மட்டும் விசாரிக்குமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். போக்குவரத்துத் துறையில் 2,715 பணி இடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
மேலும், அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அடங்கிய குறிப்பும் இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறையின் விளக்கங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications