உ.பி. பாஜக எம்.எல்.ஏ. மீதான பலாத்கார வழக்கு-45 நாட்களில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Recommended Video
டெல்லி: உன்னாவ் பாலியல் பலாத்காரம் மற்றும் அதன் பிறகான மர்ம மரணங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றிய உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை டெல்லி நீதிமன்றம் 45 நாளில் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமி 2 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக புகார் கொடுக்க சென்ற பெண்ணின் தந்தை எம்எல்ஏவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார். இதன்பின்னர் சிறையில் அவர் மர்மமான முறையில் இறந்து போனார்.
இந்நிலையில கடந்த 28ம் தேதி ரேபரேலி பகுதியில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் தனது உறவினர்களுடன் காரில் சென்றார்.அப்போது காரின் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் சிறுமியின் உறவினர்கள் இரண்டுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவருடைய வழக்கறிஞர்,கார் டிரைவர் ஆகியோர் கடுமையாக காயமடைந்து உள்ளனர்.
உறவினர்கள் மிரட்டல்
இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டன. இந்த சூழலில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாதிக்கப்பட்ட உன்னாவ் சிறுமி கடந்த ஜுலை 12ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது தெரியவந்தது. அந்த கடிதத்தில் எம்எல்ஏவி செங்காரின் உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் தங்களை வீட்டுக்கு வந்து மிரட்டியதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்துடன் மிரட்டல் கும்பல் வந்த காரின் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.
கடிதம் அளிக்காதது ஏன்
சிறுமியின் கடிதம் ஊடகங்களில் வெளியான பின்னரே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் கடிதத்தை தன்னிடம் கொடுக்காமல் தாமதித்தது ஏன் என உச்சநீதிமன்ற பதிவாளரிடம் அவர் கேள்வி எழுப்பினார்.
உன்னாவ் பலாத்கார வழக்கு
மேலும் உன்னாவ் இளம் பெண் பாலியல் பலாத்கார வழக்கை விரைந்து விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் வி.கிரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
விசாரணை அறிக்கை
அப்போது உன்னாவ் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளானது தொடர்பான விசாரணை அறிக்கையின் நிலை என்ன என்பது குறித்து உத்தரப்பிரதேச அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இன்றைய விசாரணையில் உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்தது.
உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா, உன்னாவ் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் லக்னோவில் இருப்பதாகவும் அவர்களால் 12 மணிக்குள் டெல்லி வருவது இயலாத காரியம் என்றும் எனவே வழக்கை நாளை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் தலைமை நீதிபதி இந்த கோரிக்கையை நிராகரித்தார்.
பொறுப்பான சிபிஐ அதிகாரி
இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை 12மணி அளவில் தொடங்கிய போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்ச், 2017ம் ஆண்டு நிகழ்ந்த உன்னாவ் பலாத்காரம் மற்றும் அதன்பிறகான கொலைகள் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை விசாரிக்க பொறுப்பான சிபிஐ அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
7 நாளில் விசாரிக்க உத்தரவு
கொலை முயற்சியில் உயிர் தப்பிய பெண்ணை விமானத்தில் அழைத்து வந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை தர உத்தரவு பிறப்பித்துள்ளது. உன்னாவ் வழக்குகள் அனைத்தையும் ஏழு நாளில் விசாரித்து முடிக்கவும் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகள் மீதுவிரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே இந்த வழக்கில் முக்கிய உத்தரவை பிற்பகல் 2 மணி அளவில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க உள்ளது.
தினமும் விசாரிக்கணும்
இதையடுத்து 2 மணி அளவில் தீர்ப்பின் விவரங்களை அறிவித்த நீதிபதிகள், உன்னாவ் பெண் சென்ற கார் விபத்து குறித்து இரண்டு வாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உன்னாவ் வழக்குகளை டெல்லி நீதிமன்றம் தினமும் விசாரிக்க வேண்டும். 4 வழக்குகளையும் 45 நாட்களுக்குள் விசாரித்து டெல்லி நீதிமனறம் தீர்ப்பளிக்க வேண்டும். உன்னாவ் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். அந்த குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர்.