ஆப்கனிலிருந்து ஏற்றுமதி-இறக்குமதி 'கட்'.. இந்தியாவுடன் வணிகத்திற்கு தடைபோட்ட தாலிபான்கள்..ஷாக் தகவல்
டெல்லி: ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைபற்றிய பிறகு இந்தியா உடன் ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்து விதமான வணிகத்திற்கும் தாலிபான்கள் தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே ஆப்கன் படைகள் மீது தங்கள் தாக்குதலைத் தாலிபான்கள் தீவிரப்படுத்தினர். இதனால் வெறும் சில வாரங்களிலேயே ஆப்கன் அரசு கவிழ்க்கப்பட்டது.
ஆப்கன் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பை அளித்துள்ளதாகவும் அவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அங்கு இன்னும் அமைதியான ஒரு சூழல் ஏற்படவில்லை.
வேலையை காட்டும் தாலிபான்.. ஆப்கானில் மாற்றப்பட்ட தேசிய கொடி.. போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு
இந்தியா நிலைப்பாடு என்ன
ஆப்கன் விவகாரத்தில் தாலிபான்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக ரஷ்யா, சீனா என பல்வேறு நாடுகளும் அறிவித்துள்ளன. அதேநேரம் இந்தியா இது குறித்து எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருந்தது. ஏனென்றால் இதற்கு முன் அங்கு இருந்த அஸ்ரப் கானி தலைமையிலான அரசுடன் நெருக்கமான ஒரு உறவையே இந்தியா கொண்டிருந்தது. தாலிபான்கள் ஆட்சியில் காஷ்மீரில் பயங்கவாதிகள் செயல்பாடுகள் அதிகரிக்கலாம் என்றும் மத்திய அரசு நினைப்பதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு பொறுமை காத்து வருகிறது.
வணிகத்திற்குத் தடை
இந்தச் சூழலில் ஏற்றுமதி, இறக்குமதி என இந்தியா உடனான அனைத்து விதமான வணிகத்திற்கும் தாலிபான்கள் தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு (FIEO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் அஜய் சகாய் கூறுகையில், "ஆப்கன் நிலை குறித்து நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் சரக்குகள் பாகிஸ்தான் வழியாக வந்து சேரும். ஆனால், இப்போது பாகிஸ்தான் பாதைக்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளதால், இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
வர்த்தகம் எப்படி
கடந்த காலங்களில் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே இருந்த வணிக தொடர்பு குறித்துப் பேசிய அவர், "சொல்லப்போனால் ஆப்கானிஸ்தான் நாட்டுடன் அதிகளவில் வணிகம் செய்யும் ஒரு நாடாக நாம் இருந்தோம். 2021ஆம் ஆண்டில் சுமார் 835 மில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகளை ஆப்கனுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம். அதேபோல சுமார் 510 மில்லியன் டாலர் மதிப்புள்ள சரக்குகளை இறக்குமதி செய்துள்ளோம்.
உலர் பழங்கள்
சர்க்கரை, மருந்துகள், ஆடை, தேநீர், காபி போன்றவற்றை நாம் ஏற்றுமதி செய்கிறோம். அதேபோல அங்கிருந்து உலர் பழங்களை நாம் அதிகளவில் இறக்குமதி செய்கிறோம். சொல்லப்போனால், இந்தியாவுக்குத் தேவைப்படும் உலர் பழங்களில் சுமார் 85% ஆப்கனில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இப்போது அங்கு நிச்சயமற்ற ஒரு சூழல் நிலவுவதால், உலர் பொருட்களின் விலை வரும் காலங்களில் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
இந்தியா முதலீடு
வணிகத்தைத் தாண்டியும், ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்குக் கணிசமான முதலீடுகளும் உள்ளது. ஆப்கானிஸ்தானில் சுமார் 3 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளோம், ஆப்கானிஸ்தானில் 400-க்கும் மேற்பட்ட திட்டங்களில் இந்தியா முதலீடு செய்துள்ளது. இந்தத் திட்டங்களின் நிலை என்ன என்பது குறித்தும் இன்னும் தெரியவில்லை. ஆப்கானிஸ்தானில் நிலைமை சீரான பின்னரே என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரிய வரும்.
ஒரே வழி
ஆப்கானிஸ்தானை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து வரப் பொருளாதார முன்னேற்றம் மிக முக்கியமானது என்பதைத் தாலிபான்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன். அப்போது வர்த்தகம் குறித்து அவர்கள் சரியான முடிவை எடுப்பார்கள். இப்போது இந்தியாவின் பங்கு அதில் முக்கியமானதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.