நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட டிஆர்.கிருஷ்ணசாமி - யார் இவர்? முழு விவரம்
டெல்லி: அடுத்த மாதம் 15ம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்தவர்களை சிறப்பிக்கும் வகையில் ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ் எனும் கொண்டாட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் தென்னிந்தியாவிலிருந்து சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த டிஆர்.கிருஷ்ணசாமி ஐயர் குறித்து ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ் இணையதளத்தில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணசாமி கேரளாவில் தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்தவராவார். தனது இளங்கலை படிப்பை திருவனந்தபுரத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் படித்து முடித்த அவர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். பின்னர் பாலக்காடு நீதிமன்றத்தில் பணியாற்றினார். ஆனால் சிறிது காலம்தான். அது சுதந்திர போராட்டம் உச்சக்கட்டத்திலிருந்த காலகட்டமாகும். விடுதலைக்காக போராடுபவர்களையும், காலனிய ஆட்சியை எதிர்ப்பவர்கள் மீதும் எந்தவித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்கும் விதமாக 1919ல் ரவுலட் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்தும் நாடு பூரண விடுதலை அடைய வேண்டும் என்பதற்காகவும் மக்கள் பஞ்சாப் மாநிலத்தின் ஜாலியன் வாலாபாக் எனும் இடத்தில் ஒன்றுகூடினர். இவர்களை ஆங்கிலேய அரசு துப்பாக்கிச்சூடு நடத்தி கலைத்தது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை எதிர்த்து நாடே கொந்தளித்துக்கொண்டிருந்தது. இதே காலகட்டத்தில்தான் கிருஷ்ணசாமி தனது கல்லூரி படிப்பு மற்றும் வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காந்தியடிகள் நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்தார். இதன்பால் ஈர்க்கப்பட்ட கிருஷ்ணசாமி தனது பணியை துறந்து 1921ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
கட்சியில் இணைந்தது மட்டுமின்றி தொடர்ந்து பல போராட்டங்களில் பங்கெடுத்தார். ஆனால் அவர் மற்ற விடுதலை போராட்ட வீரர்களைவிட வித்தியாசமானவர். ஏனெனில் அந்நியர்களிடமிருந்து மட்டுமின்றி நாட்டுக்குள் இருக்கும் சாதிய பாகுபாட்டிலிருந்தும் விடுதலை வேண்டும் என்கிற எண்ணத்தை கொண்டிருந்தார்.
1923ல் பாலக்காட்டில் நடத்த கட்சி கூட்டத்திற்கு பின்னர் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் தங்களை மேம்பட்ட சாதியினர் என அழைத்துக்கொள்ளும் சாதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அந்த சாதியினரால் ஒதுக்கி வைக்கப்பட்ட பாணர் மற்றும் நாயாடி சேர்ந்த மக்களை கிருஷ்ணசாமி விருந்துக்கு அழைத்து வந்தார். இது தங்களை மேம்பட்ட சாதியினர் என அழைத்துக்கொள்ளும் ஒரு சாராரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
அவர் இத்துடன் நின்றுவிடவில்லை, ஏற்றத்தாழ்வுடன் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்கு கல்வியை கற்பிக்க சபரி எனும் ஆசிரமத்தையும் தொடங்கினார். பின்னர், இந்த ஆசிரமம் மலபாரின் சுதந்திர இயக்கத்தின் மையமாக மாறியது. இந்த ஆசிரமத்து மக்கள்தான் வைக்கத்தில் உள்ள கோயில் தெருவில் உறுதியுடன் தங்களை மேம்பட்ட சாதியினர் என அழைத்துக்கொள்ளும் சாதியினரின் எதிர்ப்பை மீறி நடந்து சென்றனர். அப்போதைய காலகட்டதில் கோயில் உள்ள தெருக்களில் குறிப்பிட்ட சமூக மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இதேபோல சுதேசி இயக்கம், தீண்டாமை ஒழிப்பு என பல இயக்கங்களில் கிருஷ்ணசாமி பங்கேற்றுள்ளார். 1930ல் உப்பு சத்தியாகிரகத்திற்காக எழுபது பேர் கொண்ட குழுவை பாலக்காட்டில் இருந்து கோழிக்கூட்டிற்கு அழைத்து வந்தார். இவர்களை ஆங்கிலேயே காவல்துறை கடுமையாக தாக்கியது. இப்படியாக நாட்டின் விடுதலைக்காக பல முறை சிறைச்சாலை சென்றுள்ளார். அவரின் தியகத்தை போற்றும் விதமாக ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ் இணையதளத்தில் அவரைப் பற்றி மத்திய அரசு எழுதி கௌரவப்படுத்தியுள்ளது. எதிர்வரும் சுதந்திர விழாவில் அவரை கொண்டாடவும் அரசு திட்டமிட்டுள்ளது.