சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசிதரூருக்கு நெருக்கடி.. கோர்ட் அதிரடி
டெல்லி: சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கில், அவரது கணவரும், காங்கிரஸ் எம்பியுமான சசிதரூருக்கு எதிரான வழக்கு விசாரணை டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் இம்மாதம் 21ம் தேதி முதல் விசாரணைக்கு வர உள்ளது.
2014ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி, டெல்லியிலுள்ள ஒரு ஹோட்டலில் சுனந்தா புஷ்கர் மர்மான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம், டெல்லி காவல்துறை இந்த வழக்கில் 3000 பக்க, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 306 (தற்கொலை செய்ய தூண்டுவது) மற்றும் 498 (ஏ) (பெண்ணின் கணவர் அல்லது கணவரின் உறவினர்கள் கொடுமைக்குள்ளாக்குவது) ஆகிய பிரிவுகளில் சசி தரூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றங்களின்கீழ் 10 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை கொடுக்க முடியும். இதையடுத்து சசி தரூர், கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஜாமீன் பெற்றார்.
இந்த வழக்கு கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்திரேட், நீதிபதியால், செசஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இம்மாதம் 21ம் தேதி முதல் வழக்கு விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சசிதரூருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.