‛எம்பி பதவி போனாலும் விடலையே’.. மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை அதிரடி சம்மன்.. வழக்கு இதுதான்
டெல்லி: தொழிலதிபர் அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் லஞ்சமாக பெற்ற வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் நடந்துள்ள மோசடி தொடர்பான வழக்கில் வரும் பிப்ரவரி 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி மஹுவா மொய்த்ரா எம்பிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா . மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதி எம்பியாக இருந்தார். நாடாளுமன்றத்தில் இவர் பாஜகவினரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

இந்நிலையில் தான் அதானி விவகாரம் குறித்த நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப மஹுவா மொய்த்ரா தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் பணம், பல்வேறு பரிசுப் பொருட்களை லஞ்சமாக பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார்.
இதுபற்றிய புகார் பற்றி நாடாளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின்போது மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுக்கு நிரூபணம் ஆனது. இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ரா எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அதாவது நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றால் அதற்கான இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதற்காக எம்பிக்களுக்கு தனியே பாஸ்வேர்ட் எம்பிக்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும். இந்த பாஸ்வேர்ட்டுகளை பயன்படுத்தி எம்பிக்கள் கேள்விகள் எழுப்பலாம். ஆனால் இந்த பாஸ்வேர்ட்டை மஹுவா மொய்த்ரா எம்பி தொழிலதிபர் தர்ஷன் ஹிரா நந்தன் என்பவரிடம் வழங்கியதாவும், எம்பி சார்பில் அந்த தொழிலதிபரே கேள்வி கேட்டதும் தெரியவந்தது.
இதற்காக மஹுவா மொய்த்ரா தொழிலதிபரிடம் பணம், பரிசு பொருட்களை பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. ரூ.2 கோடி வரை பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே தான் வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அமலாக்கத்துறை விசாரித்த வருகிறது. இந்நிலையில் தான் பிப்ரவரி 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மஹுவா மொய்த்ரா சிக்கலில் மாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications