நாடாளுமன்றத்தில் புத்தகத்தை வீசி ஆவேசம்.. திரிணாமுல் கட்சி எம்.பி. சஸ்பெண்ட்
டெல்லி: நாடாளுமன்றத்தில் சட்டவிதி புத்தகத்தை வீசியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் நாடாளுமன்றத்தில் இருந்து இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் தொடக்கத்தில் சபை விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக 12 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்கட்சிகளில் கடும் அமளிக்கு இடையேயும் தேர்தல் சீர்திருத்த மசோதா உள்ளிட்ட பல சட்டங்கள் பாஜக தலைமையிலான அரசால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

விதி புத்தகம் வீச்சு
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகளின் போது தேர்தல் சீர்திருத்த மசோதா மற்றும் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் திரிணமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் தனது கடுமையான வாதங்களை முன்வைத்தார். தொடர்ந்து தேர்தல் சீர்திருத்த மசோதா மற்றும் 12 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தார். அப்போது சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓ பிரையன் சபை விதி புத்தகத்தை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

திரிணாமுல் எம்பி சஸ்பெண்ட்
இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி டெரிக் ஓ பிரையன் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரில் ஏற்கனவே 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 13வதாக டெரிக் ஓ பிரயனும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெரிக் ஓ பிரையன் கருத்து
இதனிடையே நடப்பு கூட்டத்தொடரில் இருந்து தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டெரிக் ஓ பிரையன், கடந்த முறை நான் ராஜ்யசபாவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டபோது, அரசாங்கம் விவசாயச் சட்டங்களை புல்டோசிங் செய்து கொண்டிருந்தது எனவும், அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம் என கூறியுள்ளார்.

மசோதா ரத்து செய்யப்படும்
இன்று, பிஜேபி பாராளுமன்றத்தை கேலி செய்வதையும், தேர்தல் சட்ட மசோதா 2021ஐ புல்டோசிங் செய்வதையும் எதிர்த்துப் போராடும் போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளேன் என கூறியுள்ள அவர், மேலும் விவசாய சட்டங்களைப் போல் இந்த மசோதாவும் விரைவில் ரத்து செய்யப்படும் என்று தான் நம்புகிறேன் என்றும் ஓ பிரையன் ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications