மீண்டும் வரும் முத்தலாக் தடை சட்ட மசோதா.. இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது!
முத்தலாக் தடை சட்ட மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
டெல்லி: முத்தலாக் தடை சட்ட மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பாஜகவிற்கு லோக்சபாவில் பெரும்பான்மை இருப்பதால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் எதுவும் இல்லை.
தலாக் என்று மூன்று முறை கூறி இஸ்லாமிய பெண்களை, இஸ்லாமிய ஆண்கள் விவாகரத்து செய்யும் முறையை தடுக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லை என்பதால் தொடர்ந்து அவசர சட்டம் இயற்றி இதை பயன்படுத்தி வருகிறது.
அதன்படி சென்ற மோடி தலைமையிலான ஐந்தாண்டு ஆட்சியிலேயே லோக்சபாவில் இந்த முத்தலாக் தடை சட்ட மசோதாவை பாஜக வெற்றிகரமாக நிறைவேற்றியது. ஆனால் அப்போது பாஜகவிற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை.
இதனால் பாஜகவால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இந்த மசோதா சட்டமாகவில்லை. ஆகவே இதை அவசர சட்டமாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் கடந்த செப்டம்பரில் மத்திய அரசு நிறைவேற்றியது.
அதன்பின் மீண்டும் கடந்த பிப்ரவரியில் இதை மீண்டும் அவசர சட்டமாக கொண்டு வந்தது. இந்த நிலையில் தேர்தல் நடந்து முடிந்து, மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றதால், இந்த முத்தலாக் தடை சட்ட மசோதா காலாவதியானது.
இதையடுத்து லோக்சபாவில் மீண்டும் முத்தலாக் தடை சட்ட மசோதாவை இன்று பாஜக தாக்கல் செய்கிறது. இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று எல்லா எம்பிக்களும் அவையில் இருக்க வேண்டும் என்று பாஜக கொறடா கட்சி எம்பிக்களுக்கு விப் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்.
பாஜகவிற்கு லோக்சபாவில் பெரும்பான்மை இருப்பதால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் எதுவும் இல்லை. இதை பெரும்பாலும் மாநிலங்களவையில் நிறைவேற்ற பாஜக முயலும். அப்படி நடக்காதபட்சத்தில், மீண்டும் இதை பாஜக அவசர சட்டமாக கொண்டு வர வாய்ப்புள்ளது.