டிரம்ப்பின் திடீர் முடிவு.. சற்றும் தாமதிக்காமல் மெகா திட்டத்திற்கு ரெடியாகும் இந்தியா
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதால் கோபம் அடைந்து, அதிக வரி விதித்துள்ளார். இந்த அதிக வரி விதிப்பு காரணமாக திருப்பூர் பின்னலாடை, ஜவுளி, ஆட்டோமொபைல் உள்பட பல்வேறு வகையான ஏற்றுமதி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து இந்திய ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்க ₹20,000 கோடி மதிப்பிலான ஒரு பெரிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பை அமல்படுத்துவதாக கடந்த ஜூலை இறுதி நாளில் அறிவித்தார். இந்த வரி விதிப்புஆகஸ்ட் 1ம் தேதி முதலே அமலுக்கு வருவதாக அறிவித்தது அமெரிக்கா. இது தொடர்பாக டிரம்ப் அப்போது வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறுகையில், இந்தியா எங்களுடைய சிறந்த தோழன். எனினும், பல ஆண்டுகளாக நாங்கள் அவர்களுடன் சிறிய அளவிலான வர்த்தகம் மட்டுமே மேற்கொண்டு வருகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியா மீது விமர்சனம்
ஆனால், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவின் வரி விதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. அமெரிக்க பொருட்களுக்கு உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா தான் இருக்கிறது. இதனால் தான் அவர்களுடனான எங்களது வர்த்தகம் குறைந்த அளவில் இருக்கிறது. மேலும், எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்திய அரசு கடுமையான பணம் சாரா வர்த்தக தடைகளையும் அமல்படுத்துகிறது.
உக்ரைனில் நடத்தும் மோசமான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்பும் நேரத்தில், அந்த நாட்டிடமிருந்து தங்களுக்கு தேவையான ராணுவ உபகரணங்களை அதிக அளவில் இந்தியா வாங்கியிருக்கிறது.. சீனாவுடன் சேர்ந்த ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி இறக்குமதியாளராகவும் இந்தியா இருக்கிது. இவை அனைத்தும் சரியான விஷயங்கள் கிடையாது.
வரி விதிப்பு
எனவே, இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 25 சதவீத வரியை செலுத்த வேண்டும். ரஷ்யாவிடமிருந்து ராணுவ தளவாடங்கள், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் கூடுதல் அபராதம் செலுத்த வேண்டும்" இவ்வாறு டிரம்ப் ஆவேசமாக கூறியிருந்தார். அந்த முடிவில் இருந்து ஐந்து நாட்கள் ஆகியும் டிரம்ப் பின்வாங்கவே இல்லை.
20000 கோடியில் திட்டம்
அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. அமெரிக்காவிற்கு மென்பொருள், ஜவுளி, பனியன், முட்டை, கனரக வாகன உதிரி பாகங்கள், செல்போன்கள், விவசாய பொருட்கள் என பலவற்றை இந்தியா ஏற்றுமதி செய்து வந்தது. இப்போது அதற்கு வரி விதிப்பால் பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இதையடுத்து இந்த பாதிப்புகளில் இருந்து இந்திய ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்க ₹20,000 கோடி மதிப்பிலான ஒரு பெரிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
ஏற்றுமதியாளர்களுக்கான இந்தியாவின் பெரிய திட்டம் என்ன
சர்வதேச வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்திலிருந்து ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்க, இந்தியா செப்டம்பர் மாதத்திற்குள் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. புதிய "ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கம்" (Export Promotion Mission) என்ற பெயரில் திட்டம் வரப்போகிறது. இந்த திட்டப்படி ஏற்றுமதி கடன் பெறுவதை எளிதாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல் சர்வதேச சந்தைகளில் உள்ள வர்த்தக தடைகளை நீக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள போகிறது. அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த ₹20,000 கோடிக்கு மேல் தேவைப்படும் என்று ஒரு அதிகாரி கூறியிருக்கிறார்
இந்த திட்டத்தின் ஐந்து முக்கியமான விஷயங்கள்
புதிய "ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கம்" என்ற பெயரில் தொடங்கும் இந்த திட்டத்திற்கு
வர்த்தக நிதி, விதிமுறைகள் மற்றும் சந்தை அணுகல் தொடர்பான வர்த்தகம் சாராத நிதி, 'பிராண்ட் இந்தியா'வின் அங்கீகாரத்தை வலுப்படுத்துவது, கிடங்கு வசதிகளுடன் கூடிய இ-காமர்ஸ் மையங்கள், வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான பிற நடவடிக்கைகள் போன்ற ஐந்து விஷயங்கள் முக்கியமானதாக பார்க்கப்டுகிறது. இதேபோல் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன (MSME) ஏற்றுமதியாளர்களுக்கான திட்டத்தில், தனிப்பட்ட ஏற்றுமதி வரம்புகள் மற்றும் கடன் தகுதியின் அடிப்படையில் பிணையில்லா கடன்கள் (பிணை குறைந்த அளவு சில அளவு கடன்களுக்கு தரலாம்) வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டம், ஜப்பான், கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளைப் போன்று இந்தியாவின் உலகளாவிய நற்பெயரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளதாக தகவலகள் வெளியாகி உள்ளது. இந்த திட்டம் இ-காமர்ஸ் மையங்களை அமைப்பதையும், மாவட்டங்களை ஏற்றுமதி மையங்களாக மாற்றும் என்று மத்திய அரசு நம்புகிறது.
டிரம்பின் வரி மிரட்டலால் என்ன சிக்கல்
அமெரிக்கா இந்தியாவிலிருந்து வரும் அனைத்து பொருட்களுக்கும் 25% வரியை விதித்துள்ளார் டிரம்ப். இந்த அதிகப்படியான வரி, அமெரிக்காவிற்கு இந்தியா ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யும் $85 பில்லியனில் பாதிக்கும் மேல் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது கூடுதல் வரியை விதித்திருக்கிறார்.
இந்தியா பதிலடி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இந்த குற்றச்சாட்டிற்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுத்திருந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்வதை இந்தியா சுட்டிக்காட்டி இருந்தது. வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு பதிலில், "இந்தியாவை குறிவைப்பது நியாயமே இல்லை.. இதனை நிச்சயம் ஏற்கவே முடியாதது. மற்ற பெரிய பொருளாதார நாடுகளை போலவே, இந்தியாவும் அதன் தேசிய நலன்களையும் பொருளாதார பாதுகாப்பையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications