2 நாள்.. ஜஸ்ட் 36 மணி நேரம்.. இதுதான் அதிபர் டிரம்ப்பின் அதிரடி இந்திய பயண ஷெட்யூல்!
Recommended Video
டெல்லி: வரும் 24-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய மண்ணில் 36 மணி நேரம் மட்டும் தங்குவார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறார்.
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்தியா
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள அதிகமான இந்தியர்களின் வாக்குகளை கவருவதற்காக இந்தியாவுக்கு வருகை தர டிரம்ப் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரது பயணம் விவரம்: பிப்ரவரி 24- அமெரிக்காவிலிருந்து அகமதாபாத்தில் உள்ள விமான நிலையத்திற்கு டிரம்ப் வருகை. உடன் அவரது மனைவி மெலானியா, மகள், மருமகன் உள்ளிட்டோரும் வருகை தருகிறார்கள்.

ஊர்வலம்
டிரம்பும் , மோடியும் அகமதாபாத்திலிருந்து 22 கி.மீ தூரத்தை சாலை மார்க்கமாக ஊர்வலம் செல்கின்றனர். சாலை ஊர்வலம் முடிந்தவுடன் சபர்மதி ஆசிரமத்தை அடைகிறார் டிரம்ப். அங்கு மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துகிறார். காந்தியின் நினைவாக நூல் ராட்டினமும் காந்தி குறித்த புத்தகமும் டிரம்பிற்கு பரிசாக வழங்குகிறார் மோடி.

குஜராத்தி வகை உணவு
ஆசிரமத்திலிருந்து மோடி, டிரம்ப் ஆகியோர் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு வருகை தரவுள்ளனர். திறப்பு விழாவிற்கு 1.25 லட்சம் பேர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப்பிற்கு அகமதாபாத்தில் குஜராத்தி வகை உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவு இடைவேளைக்கு பிறகு, ஆக்ராவில் கெரியா விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து மனைவி மெலானியாவுடன் தாஜ்மஹாலுக்கு செல்கிறார். ரம்மியமான யமுனை நதிக் கரையில் காதல் சின்னமான தாஜ்மஹாலில் நேரம் செலவிடுகின்றனர்.

ஹோட்டல்
இதற்காக யமுனை ஆற்றிலிருந்து மாசு கலந்து நீர் வெளியேற்றப்பட்டு புதிய நீர் நிரப்பப்பட்டு வருகிறது. பின்னர் டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியாவில் டிரம்ப் ஓய்வெடுக்கிறார். 25-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் டிரம்ப். டிரம்ப் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்படுகிறது.

அரச மரம் நடுதல்
ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு வருகை தந்த பராக் ஒபாமாவும் காந்தியின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினார். காந்திக்கு பிடித்தமான ராட்டை டிரம்பிற்கு பரிசாக வழங்கப்படுகிறது. பின்னர் ராஜ்காட்டில் அரசமரத்தை டிரம்ப் நடுகிறார்.

டிரம்ப் ஆலோசனை
ஹைதராபாத் இல்லத்தில் மோடி மற்றும் டிரம்ப் ஆலோசனை நடத்துகின்றனர். இதில் தீவிரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு, வர்த்தகம் குறித்து ஆலோசனை நடத்தப்படும். இந்த ஆலோசனை நேரத்தில் டெல்லியில் உள்ள பள்ளிக்கு செல்கிறார் மெலானியா. பின்னர் இரவு 10 மணிக்கு டெல்லியிலிருந்து அமெரிக்காவுக்கு திரும்புகிறார் டிரம்ப்.

அரசு செலவு
டிரம்ப்பின் வருகையையொட்டி அகமதாபாத் நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. டிரம்பின் சொற்ப பணி நேர வருகைக்காக ரூ 80 முதல் 85 கோடி வரை அகமதாபாத் அரசு செலவு செய்துள்ளது. சாலை ஊர்வலத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications