பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் பெற்றோரை அடையாளப்படுத்திய ராகுலின் ட்வீட் நீக்கம்
டெல்லி: டெல்லியில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் அடையாளங்களை வெளியிட்டதாக ட்விட்டர் நிர்வாகம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் ட்விட்டை நீக்கியது.
இந்த ட்வீட்டை நீக்குமாறு ட்விட்டர் நிர்வாகத்திற்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் நோட்டீஸ் அளித்து பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் 9 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்படுத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சிறுமியின் உடல் தகனம்
மேலும் அந்த சிறுமியின் உடல் கட்டாயப்படுத்தி தகனமும் செய்யப்பட்டுவிட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

தாய், தந்தை
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தந்தையை காருக்குள் அமர வைத்து ராகுல் ஆறுதல் கூறினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் நான் இறந்த சிறுமியின் குடும்பத்தாருடன் பேசினேன். அவர்கள் நீதியைதான் கேட்கிறார்கள். நீதி வழங்கப்படவில்லை. அவர்களுக்காக நான் துணை நிற்பேன் என தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தி ட்விட்டர் பக்கம்
சிறுமியின் பெற்றோரை சந்தித்த ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சிறுமியின் பெற்றோரின் கண்ணீர் ஒன்றைதான் உணர்த்துகிறது. அவர்களின் மகளுக்கு நாட்டின் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதியை தேடிய பயணத்தில்தான் அவர்களுடன் இருப்பேன் என பதிவிட்டிருந்தார்.

ட்வீட் நீக்கம்
இந்த நிலையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் உறவினர்களை அடையாளப்படுத்தியதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் டிவிட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது. இந்த ட்வீட் போக்சோ சட்டத்தின் விதிகளை மீறியது என்பதால் அதை நீக்குமாறும் அதுகுறித்து அறிக்கை அளிக்குமாறும் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ட்விட்டர் நிறுவனம் அந்த ட்வீட்டை நீக்கியது.












Click it and Unblock the Notifications