அரபிக் கடலில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. 2 பைலட்கள் மாயம்! முழு வீச்சில் தேடும் பணி
டெல்லி: அரபிக்கடலில் இந்திய கொடியுடன் சென்ற கப்பலில் இருந்து அவசர உதவி கோரப்பட்ட நிலையில், மீட்பு பணிக்காக சென்ற இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியுள்ளது. ஹெலிகாப்டரின் பைலட்கள் இருவர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரபிக் கடலில் இந்திய கொடியுடன் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் இருந்து உதவி கேட்டு அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து, உதவி கேட்ட கப்பலை மீட்க இந்திய கடலோர காவல் படையில் இருந்து வீரர்கள் விரைந்துள்ளனர். இரண்டு ஹெலிகாப்டர்கள், 4 கப்பல்கள் சென்றன.

போர்பந்தர் கடல் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கப்பலை மீட்க சென்ற இரண்டு ஹெலிகாப்டரில் ஒரு ஹெலிகாப்டர் அவசரமாக அரபிக்கடலில் தரையிறங்கியுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் இரண்டு பைலட்கள் உள்பட 4 பேர் இருந்துள்ளனர். ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கிய நிலையில், இரண்டு பைலட்கள் மற்றும் ஒரு நீர்மூழ்கி வீரர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்றொரு நீர்மூழ்கி வீரர் பத்திரமாக மீட்கப்பட்டார். மீதமுள்ள இரண்டு பைலட்கள் மற்றும் ஒரு நீர் மூழ்கி வீரரை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்திய கடற்படைக்கு சொந்தமான அட்வான்ஸ்டு இலகு ரக ஹெலிகாப்டர், அண்மையில் குஜராத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையின் போது 67 பேரை பத்திரமாக மீட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று நள்ளிரவு போர்பந்தர் துறைமுகத்தில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் இருந்து அவசர அழைப்பு வந்துள்ளது. இந்திய கொடியுடன் சென்ற அந்த டேங்கர் கப்பலில் இருந்த சிப்பந்தி ஒருவர் படுகாயம் அடைந்ததால் அவசரமாக மருத்துவ உதவி தேவைப்பட்டுள்ளது. இதனால், கப்பல் அவசர உதவி கேட்டுள்ளது. இதையடுத்து, ஹெலிகாப்டரில் இந்திய கடலோர காவல் படை சென்ற போது இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications