ராகிங் தடுப்புக்காக அனைத்து கல்லூரி, பல்கலை.யில் சிசிடிவி கேமராக்கள்- யுஜிசி அதிரடி உத்தரவு
டெல்லி: ராகிங் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் சிடிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழுவான யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக் கழக மானியக் குழுவின் செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பி வைத்துள்ள கடிதம்:
www.ugc.ac.in, www.antiragging.in ஆகிய இணையதளங்களில் ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விரிவான சுற்றறிக்கை இடம்பெற்றுள்ளது. இந்த சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள உத்தரவுகளின் படி பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ராகிங் செயல்களில் ஈடுபட்டு குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்படி தண்டிக்கப்படவில்லை எனில் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்.
அத்துடன் ராகிங் தடுப்பு நடவடிக்கையாக கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். வகுப்பறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.
மேலும் ராகிங் குறித்து மாணவர்களுடன் விவாதிக்க வேண்டும். ராகிங் நடைபெறுவதற்கான சூழல்களை கண்டறிந்து அதனைத் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அரசின் www.antiragging.in இணையதளத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை ஆதரிக்க வேண்டும். இந்த இணையதளத்தில் ராகிங் தடுப்பு உறுதிமொழிச் சான்றிதழை கட்டாயம் பதிவேற்றம் செய்யவும் வேண்டும். அப்படி பதிவேற்றம் செய்தால் பதிவு எண்ணுடன் பதில் மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படும். ராகிங் தடுப்புக் குழு இ மெயில் தொடர்பு எண்கள் மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். ராகிங் தடுப்புக்கான சுவரொட்டிகள், விழிப்புணர்வு வாசகங்கள் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் இடம்பெறச் செய்ய வேண்டியதும் கட்டாயம்.
ராகிங் தடுப்பு நடவடிக்கைகளில் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டிய அம்சங்கள்:
ராகிங் தொடர்பான புகார்கள் தெரிவிக்க எண்: 1800 180 5525
ராகிங் தொடர்பான புகார் அனுப்ப இ மெயில்: [email protected]
www.antiragging.in என்ற வெப்சைட்டிலும் ராகிங் புகார் பதிவு செய்யலாம்.
ராகிங் தொடர்பான புகார்களுக்கான அவசர செல்போன் எண்: 98180 44577.












Click it and Unblock the Notifications