402 நாடாளுமன்ற பணியாளர்களுக்கு கொரோனா- பட்ஜெட் கூட்டத் தொடரில் கடும் கட்டுப்பாடுகள்?
டெல்லி: நாடாளுமன்ற பணியாளர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. இது தொடர்பன வழிகாட்டுதல்களை ஆராயுமாறு லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி இறுதியில் தொடங்க உள்ளது. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் பணியாற்றும் 1409 பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த பரிசோதனைகளில் 402 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதாவது லோக்சபாவில் பணியாற்றும் 200 பேருக்கும் ராஜ்யசபாவில் பணிபுரியும் 69 பேருக்கும் இதர துறைசார் பணியாளர்கள் 133 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்தது.
இதையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடரின் போது என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய துறைசார் செயலாளர்களை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். நாட்டில் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து டெல்லியில் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது. இதனால் தலைநகர் டெல்லியில் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம்!