கொரோனாவுக்கு எதிரான போரில் உலகிற்கே இந்தியாதான் முன்னோடி.. குடியரசு தலைவர் உரையில் புகழாரம்
டெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா முன்னோடியாக இருப்பதாக குடியரசுத் தலைவர் தன்னுடைய உரையில் தெரிவித்துள்ளார்.
2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது.
கடந்த ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்திய முக்கியமான சாதனைகள் அனைத்தும் குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெறும். அத்துடன் வரும் நிதி ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்த உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்த விவரங்களும் அவரது உரையில் இடம்பெறும்.

இந்நிலையில் கொரோனா காலத்தில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டிருப்பதாக தன்னுடைய உரையில் தெரிவித்துள்ளார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அதில் ''கடந்த காலங்களைவிட இந்தியாவில் தற்போது சுகாதார கட்டமைப்பு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பயன் பெறும் வகையில் அமைந்துள்ளது.
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரு ஆண்டிற்குள் இந்தியாவில் 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா ஒரு முன்னோடி நாடாக அமைந்துள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணமாக பலரும் உயிரிழந்துள்ளனர். எனினும் நமது நாட்டின் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர். அவர்களுடைய சேவைகளுக்கு என்னுடைய நன்றி. ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டம் பலருக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பல ஏழைகள் பயன் அடைந்துள்ளனர்'' என குடியரசுத் தலைவர் தன்னுடைய உரையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications