8-வது ஊதிய குழு, ரூ. 3,985 கோடியில் ஶ்ரீஹரிகோட்டா 3-வது ராக்கெட் தளம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் ஊதியத்தை மறு ஆய்வு செய்வதற்கான 8-வது சம்பள கமிஷன் அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல ஶ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை ரூ3,985 கோடியில் அமைக்கவும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. மத்திய அமைச்சரவையின் முடிவுகளை டெல்லியில் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மூன்றாவது ஏவுதளத் திட்டமானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த தலைமுறை செலுத்து வாகனங்களுக்கான ஏவுதள கட்டமைப்பை உருவாக்குவதோடு ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டாவது ஏவுதளத்திற்கான ஆயத்த ஆதரவு ஏவுதளமாக செயல்படவும் செய்யும். இது எதிர்கால இந்திய மனித விண்வெளிப் பயணங்களுக்கான செலுத்துதல் திறனையும் மேம்படுத்தும். இந்த திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது.
செயல்படுத்தல் உத்தியும் இலக்குகளும்:
டிஎல்பி எனப்படும் மூன்றாவது ஏவுதளமானது என்ஜிஎல்வி (NGLV) மட்டுமின்றி, எல்விஎம்3 (LVM3) வாகனங்களையும் செமிக்ரையோஜெனிக் நிலை, என்ஜிஎல்வியின் (NGLV-ன்) உள்ளமைவுகளையும் ஆதரிக்கக்கூடிய உலகளாவிய உள்ளமைவைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்படும். முந்தைய ஏவுதளங்களை நிறுவியதிலும், தற்போதுள்ள ஏவுதள வசதிகளை அதிகபட்சமாக பகிர்ந்து கொள்வதிலும் இஸ்ரோவின் அனுபவத்தை
முழுமையாகப் பயன்படுத்தி, அதிகபட்ச தொழில்துறை பங்களிப்புடன் இது நிறைவேற்றப்படும். இது 4 வருட காலத்திற்குள் நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏவுதளம் அமைப்பது, அதனுடன் தொடர்புடைய வசதிகள் என அனைத்திற்கும் மொத்த நிதி தேவை ரூ. 3984.86 கோடியாகும்.
அடுத்த 25-30 ஆண்டுகளுக்கு அதிகரித்து வரும் விண்வெளி போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, அதிக எடை கொண்ட அடுத்த தலைமுறை செலுத்து வாகனங்களுக்கு பயன்படும் வகையிலும் மூன்றாவது ஏவுதளத்தை விரைந்து அமைப்பது மிகவும் அவசியமாகும்.
8-வது ஊதியக் குழு
மத்திய அரசின் அனைத்து ஊழியர்களுக்கும் 8வது மத்திய ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். 1947 முதல் 7 ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசியாக 2016 இல் 7வது ஊதியக்குழு செயல்படுத்தப்பட்டது. 7வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் 2026 இல் முடிவடைவதால், 8-வது ஊதியக்குழுவுக்கான செயல்முறை 2025 இல் தொடங்குவதன் மூலம் அதுகுறித்த பரிந்துரைகளைப் பெறவும் மதிப்பாய்வு செய்யவும் முடியும் .












Click it and Unblock the Notifications